ஆலய திருவிழாவில் நகைகள் கொள்ளை! இருவர் கைது

0
333

யாழ். தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலயத்தில் இடம்பெற்ற ஐந்தாவது கோபுரமான தலைவாசல் இராஜகோபுர கும்பாபிஷேக திருவிழாவில் அடியவர்களிடம் நகைகளைக் கொள்ளையிட்ட   இருவர் கைது செய்யப்பட்டனர்.

நேற்றைய தினம் (23) கிளிநொச்சி சாந்தபுரத்திலிருந்து வந்த நால்வர் இந்தக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

இரு ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பெண்கள் இருவர் தலைமறைவாகிய நிலையில் தேடப்பட்டு வருகின்றனர்.

அவர்கள் மூதாட்டி ஒருவரிடம் தங்கச் சங்கிலியை அச்சுறுத்தி வாங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் நகைகளைப் பறிகொடுத்த நால்வர் தெல்லிப்பழை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

அதனடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போதே ஆண்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி சாந்தபுரத்தைச் சேர்ந்த 33 மற்றும் 37 வயதுடைய இருவரும் வான் ஒன்றில் வருகை தந்துள்ளனர். அவர்களது கொள்ளைக்கு உதவிய பெண்கள் இருவர் தலைமறைவாகியுள்ளனர்.

அவர்களைத் தேடும் பணி காவல்துறையினரால் முன்னெடுக்கப்படுகிறது. சந்தேக நபர்கள் பயணித்த வான் பொலிஸாரினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களிடமிருந்து கைச்சங்கிலி ஒன்றும் சங்கிலி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.