அரசுக்கு எதிராக போராட்ட களத்தில் இறங்கும் ரணில்

0
408

அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் தற்போது எதிர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணிகளை நடத்தி வருகின்றன. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி என்பன கொழும்பை மையமாக கொண்டு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தின.

இந்த நிலையில், முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும் எதிர்க்கட்சிகளின் போராட்ட களத்தில் இணைய தீர்மானித்துள்ளது.

இதனடிப்படையில் எதிர்வரும் 25 ஆம் திகதி கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் சத்தியாகிரகப் போராட்டத்தை நடத்த ஐக்கிய தேசியக் கட்சி முடிவு செய்துள்ளது.

ஹைட்பார்க் மைதானம், அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள், பொதுக் கூட்டங்களை நடத்தும் இடம் என்ற வகையில் பிரபலமான இடம்.

சத்தியாகிரகப் போராட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்ய ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் தனியான அலுவலகத்தை ஏற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கான ஆலோசனையை ரணில் விக்ரமசிங்க வழங்கியுள்ளார். ஏற்கனவே ஐக்கிய தேசியக் கட்சி கட்சிக்கு உறுப்பினர்களை சேர்க்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்து முன்னெடுத்து வருகிறது.