ரஷ்ய துருப்புகளிடம் சிக்கி தவிக்கும் உக்ரேனிய மக்கள் : 60 வயது கடந்த பெண்களுக்கு ஏற்பட்ட அவலம்.. அம்பலப்படுத்திய பெண் எம்.பிக்கள்

0
277

உக்ரைனில் 60 வயது கடந்த பெண்களை சீரழித்து பின்னர் தூக்கில் தொங்கவிட்டு ரஷ்ய துருப்புகள் அடாத்தியம் செய்து வருவதாக பெண் எம்.பிக்கள் கலக்கத்துடன் அம்பலப்படுத்தியுள்ளனர்.

உக்ரைனின் எதிர்க்கட்சியான ஹோலோஸ் கட்சியின் எம்.பியான Lesia Vasylenko இது தொடர்பில் தெரிவிக்கையில், பல மூத்த பெண் குடிமக்கள் ரஷ்ய துருப்புகள் அத்துமீறிய நிலையில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

பெரும்பாலான பெண்கள் தங்கள் பிள்ளைகள் உள்ளிட்டவர்களை பத்திரமாக அனுப்பி வைத்து, பின்னர் குடியிருப்பில் இருந்து வெளியேற முயற்சிக்கையில் ரஷ்ய துருப்புகளிடம் சிக்குவதாகவும், அவர்களே அவர்களின் கொடுஞ்செயலுக்கு இலக்காவதாகவும் Lesia Vasylenko எம்.பி தெரிவித்துள்ளார்.

தப்பிக்க வழி தெரியாமல் தடுமாறும் பெண்கள் மற்றும் சிறார்களை குறிவைத்து தாக்குதல் நடத்த தமது துருப்புகளுக்கு புடின் கட்டளையிட்டிருக்கலாம் என தாம் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெரும்பாலான பெண்கள் சீரழிக்கப்பட்டு, பின்னர் கொல்லப்பட்டுள்ளதாகவும், சிலர் அந்த அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் Lesia Vasylenko தெரிவித்துள்ளார்.

இதில் கொடுமை என்னவென்றால், பாதிக்கப்பட்ட பெண்கள் அல்லது குடும்பத்தினர் எவரும் இதுதொடர்பில் வெளிப்படையாக பேச முன்வரவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

போர்க்குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களுக்காக நாம் சேகரிக்கும் உண்மைகள் இவை என இன்னொரு உக்ரேனிய எம்.பி Maria Mezentseva தெரிவித்துள்ளார்.

மேலும், மனிதாபிமான அடிப்படையிலான உதவிகளை அரசாங்கம் உடனடியாக முன்னெடுக்க வேண்டும் எனவும், இதனால் ரஷ்ய துருப்புகளால் மனதளவில், உடலளவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு போதிய உதவிகள் கிடைக்க வாய்ப்புள்ளது என்றார் அவர்.

கீவ், இர்பின் மற்றும் புச்சா பகுதிகளிலேயே பெருமளவு பெண்கள் மீதான துன்புறுத்தல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக எம்.பிக்கள் தரப்பு குற்றஞ்சாட்டியுள்ளனர்.