கொலைக்குற்றம் மற்றும் கொலை அச்சுறுத்தல் சர்ச்சைகளில் சிக்கிய துமிந்த மீது வெளியாகியுள்ள மற்றுமொரு குற்றச்சாட்டு!

0
349

சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பான காணொளியை செய்தியாக வெளியிட வேண்டாம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வீடமைப்பு அதிகார சபையின் தலைவருமான துமிந்த சில்வா, செய்தியாளர் ஒருவருக்கு அழுத்தம் கொடுத்துள்ளதாக சுதந்திர ஊடக அமைப்பு தெரிவித்துள்ளது.

செய்தியாளர் ராஹூல் சமந்தவுக்கே துமிந்த சில்வா அழுத்தம் கொடுத்துள்ளதாகவும் எனவே ஊடக சுதந்திரத்தை மட்டுப்படுத்த, ஊடக உரிமையாளர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு இடமளிக்கக் கூடாது என சுதந்திர ஊடக அமைப்புத் தெரிவித்துள்ளது. 

தொலைபேசி ஊடாக செய்தியாளரை தொடர்பு கொண்டுள்ள துமிந்த சில்வா, தான் சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி ஊடக உரிமையாளரின் தம்பி எனவும் அம்பலந்தோட்ட சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பாக பதிவு செய்த காணொளியை செய்தியாக்க வேண்டாம் என துமிந்த சில்வா கூறியதாகவும் ராஹூல் சமந்த தெரிவித்துள்ளார்.

துமிந்த சில்வா பேசிய விடயங்கள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட தொலைபேசி உரையாடலை அவர் சுதந்திர ஊடக அமைப்புக்கு அமைப்பியுள்ளார். தொலைபேசி இலக்கத்தை ஆராய்ந்த போது அது துமிந்த சில்வாவின் தொலைபேசி இலக்கம் என்பது உறுதியானது.

துமிந்த சில்வா அரச நிறுவனம் ஒன்றின் தலைவர் மாத்திரமின்றி முக்கியமான அரசியல் தொடர்புகள் இருக்கும் நபர். பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வந்த துமிந்த சில்வா, கோட்டாபயவின்  பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டார்.

இப்படியான பின்னணியில் இந்த சம்பவத்தை குறைத்து மதிப்பிட முடியாது. அத்துடன் அவர் ஊடக நிறுவனம் ஒன்றின் உரிமையாளருடன் சம்பந்தப்பட்ட நபர் என்ற வகையில் செய்தியாளர் ஒருவருக்கு அழுத்தம் கொடுப்பது இலங்கையின் ஊடக சுதந்திரத்தில் செய்யும் தேவையற்ற தலையீடு.

இது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய சம்பவம் என்பது சுதந்திர ஊடக அமைப்பின் நிலைப்பாடு. ராஹூல் சமந்தவின் செய்தி தொடர்பில் அரச நிறுவனம் அவர் தொடர்பான தகவல்களை சட்டவிரோத மணல் கடத்தல்காரர்கள் அல்வது வேறு தரப்பினருக்கு வழங்கி, இப்படியான நிலைமை ஏற்படுமாயின் அது மிகவும் பாரதூரமான நிலைமை.

இதனால், இந்த விடயம் சம்பந்தமாக உடனடியாக ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுதந்திர ஊடக அமைப்பு அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது.