கொழும்பில் மாபெரும் முற்றுகை போராட்டம்!திடீரென ரத்துச் செய்யப்பட்ட கோட்டாபய – த.தே.கூட்டமைப்பு சந்திப்பு

0
373

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று மாலை 3.30 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவிருந்த பேச்சு திடீரெனப் பிற்போடப்பட்டுள்ளது.

இதன்படி எதிர்வரும் 25ஆம் திகதி முற்பகல் 10.30 மணிக்கு மேற்படி சந்திப்பு இடம்பெறும் என ஜனாதிபதி செயலாகத்தால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்கு இன்று காலை அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியால் கொழும்பில் இன்று மாபெரும் முற்றுகை போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இதன்போது ஜனாதிபதி செயலகம் முன்பாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் அணிதிரள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையிலேயே, சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகத்தால் தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளது எனக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. குறிப்பிட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை குறித்த சந்திப்பு திடீரென ரத்துச்செய்யப்பட்ட விடயத்தை த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் உறுதிப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பில் எமது செய்திப் பிரிவு தொலைபேசியில் தொடர்புகொண்டு வினவிய போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.