வவுனியா உண்ணாவிரதத்திற்கு நீதிமன்றம் தடை உத்தரவு.

0
1211

எதிர்வரும் சுதந்திரதினத்தன்று வவுனியாவில் காணாமல் போனவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்படவிருந்த அடையாள உணவுதவிர்ப்பு போராட்டத்திற்கு வவுனியா பொலிசார் தடை கோரிய நிலையில் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக குறித்த போராட்டத்தை ஏற்பாடு செய்தி்ருந்த வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் முக்கியஸ்தர்களிற்கு குறித்த தடை உத்தரவு தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தடை உத்தரவு பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இன்றையதினம் வவுனியா தலைமை பொலிஸ் நி்லையத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகரால் நாளையதினத்திலிருந்து(3) எதிர்வரும் 6 ஆம் திகதிவரை வவனியா ஏ 9வீதியிலோ அல்லது தபால் காரியாலயம் முன்பாகவோ, பழைய பஸ் நிலையம் முன்பாகவோ 73 வது தேசிய சுதந்திரதினத்திற்கு எதிப்பு தெரிவித்து தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கப்பட்ட L.T.T.E. அமைப்பின் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் பிரச்சினை, அரசியல் கைதிகளை விடுவிக்காமை தொடர்பான கருத்துக்களை பிரதானமாக முன்வைத்து எதிர்ப்பு நடவடிக்கை செய்யவோ அல்லது ஆர்ப்பாட்டமோ, கால்நடை யாத்திரை போன்றவற்றை செய்ய தடைஉத்தரவு கேட்டு 1979.இல15 குற்றவியல் நடவடிக்கை சட்ட கோவை பிரிவு 106 (1) இன் படி நீதிமன்றிற்கு அறிக்கை இடப்பட்டுள்ளது.

நீதிமன்றிற்கு உட்படுத்திய சம்பவத்தை பரிசீலினை செய்து பார்த்து வவுனியா பழைய பஸ் நிலையம் முன்பாகவோ, ஏ 9 பிரதான வீதியிலோ, தபால் காரியாலயம் முன்பாகவும் அத்துடன் வவுனியா மாவட்ட பொலிஸ் பிரதேசத்திலோ ஆர்ப்பாட்டமோ, பாத யாத்திரையோ செய்தால் கொரோனா வைரஸ் நிலைமையின் போது பொது சுகாதாரத்திற்கும் மக்களிற்கும் பாதிப்பு ஏற்படும் என அறிய முடிகிறது.

எனவே குறித்த பிரதேசங்களில் நாளை மூன்றாம் திகதியில் இருந்து எதிர்வரும் 6 ஆம் திகதி வரை 73 ஆவது தேசிய சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் 46 வது ஜக்கிய நாடுகள் மனித உரிமை அமர்வை இலக்காக கொண்டு செய்யப்படுகின்றது என்று குற்றஞ்சாட்டப்பட்ட ஆர்ப்பாட்டம் அல்லது பாத யாத்திரை அல்லது வேறு குற்ற செயற்பாடுகள் செய்யக்கூடாதென சண்முகராஜ் சறோஜாதேவி. சிவநாதன் ஜெனிற்றா, காசிப்பிள்ளை ஜெயவனிதா, கிறிஸ்தோப்பு கிருஸ்ணன்டயஸ் இராசமடு, ஆகியவர்களிற்கு 1979.இல 15 குற்றவியல் நடவடிக்கை சட்ட கோவை பிரிவு 106 (1) இன் கீழ் கட்டளையிடப்படுகின்றது.

இது சம்பந்தமாக கருத்து கூற 2021.02.15 அன்று காலை 09.00 மணிக்கு நீதிமன்றிற்கு முற்படுமாறு கட்டளையிடுகிறேன். என குறித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.