போலியோவுக்கு பதிலாக சனிடைசரை கொடுத்த ஊழியர்கள்; 12 குழந்தைகள் பாதிப்பு

0
1049

இந்தியாவின் மகராஷ்டிரா மாநிலத்தில் போலியோ சொட்டு மருந்துக்கு பதில் சனிடைசரை கொடுத்த ஊழியர்களால் 12 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியா முழுவதும் நேற்று முன்தினம் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது.

மகராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்திற்கு பதிலாக சனிடைசர் கொடுக்கப்பட்ட அலட்சிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இங்குள்ள யவத்மால் மாவட்டம் காப்சிகோப்ரி கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்ட குழந்தையொன்று வாந்தி எடுத்து உடல் நலம் பாதிக்கப்பட்டபோது தான் இந்த அலட்சியம் வெட்ட வெளிச்சத்துக்கு வந்ததுள்ளது.

ஊழியர்கள் போலியோ சொட்டு மருந்துக்கு பதிலாக கைகழுவும் சனிடைசரை 12 குழந்தைகளுக்கு கொடுத்துள்ளனர்.

இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்ட 12 குழந்தைகளும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களது உடல் நிலை சீராக இருப்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தின்போது கடமையில் வைத்தியரொருவரும் இரு ஊழியர்கள் என 3 பேர் இருந்ததாகவும் அவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.