பிரிட்டன் போர் வீரரான கெப்டன் டொம் மூருக்கு கொரோனா!

0
454

இரண்டாம் உலகப் போரில் கலந்துகொண்ட பிரிட்டன் போர் வீரரான கெப்டன் டொம் மூருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது மகள் தெரிவித்துள்ளார்.

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்துக்கு உதவும் வகையில் தனது வீட்டு தோட்டத்தை 100 முறை சுற்றி வந்து தேசிய மருத்துவ சேவை அறக்கட்டளைக்கு கிட்டத்தட்ட 33 மில்லியன் பவுண்ஸ் நிதி திரட்டிய 100 வயதான டொம் மூருக்கு சுவாசிப்பதில் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார் என அவரது மகள் ஹன்னா இங்க்ராம்-மூர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

கடந்த சில வாரங்களாக அவருக்கு நிமோனியாவுக்கு சிகிச்சையளிக்கப்பட்டதாகவும், கடந்த வாரம் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

இங்க்ராம்-மூர் தனது தந்தை தீவிர சிகிச்சையில் இல்லை என தெரிவித்துள்ளார்.

கெப்டன் டொம் மூர் நிமோனியாவுக்கு மருந்துகள் எடுப்பதன் காரணமாக கொவிட்-19 தடுப்பூசியை இதுவரை பெறவில்லை என குடும்பத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் “நீங்கள் முழு நாட்டையும் ஊக்கப்படுத்தியிருக்கிறீர்கள், நாங்கள் அனைவரும் நீங்கள் முழுமையாக குணமடைய விரும்புகிறோம்” என தெரிவித்துள்ளார்.