நோர்வூட் பிரதேச சபைத் தலைவர் கைது…!

0
408

நோர்வூட் பிரதேச சபை தலைவரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினருமான ரவி குழந்தைவேல் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொகவந்தலாவ பகுதியில் நேற்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் ஒன்று தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ காவல்துறை பொறுப்பதிகாரி எமது செய்தி பிரிவுக்கு குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர் திகாம்பரத்தின் பிரத்தியேக செயலாளர் கமலதாசன் சுப்பையா மீது பொகவந்தலாவ பகுதியில் வைத்து ரவி குழந்தைவேல் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தத் தாக்குதலை அடுத்து பொகவந்தலாவ காவல் நிலையத்தில் முறைப்பாட்டை பதிவு செய்த கமலதாசன் சுப்பையா டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிப்பெற்றுள்ளார்.

இதேவேளை இந்த தாக்குதல் சம்பவத்தை கண்டித்து இன்று காலை பொகவந்தலாவ லெட்சுமி தோட்ட மத்திய பிரிவு மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

இந்த நிலையில் இன்று காலை கைதான ரவி குழந்தைவேலை ஹட்டன் நீதவானிடம் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ காவல்துறை பொறுப்பதிகாரி தெரிவித்தார்