இலங்கை வடக்கில் இன்று முதல் நாளில் 2,997 சுகாதார சேவையாளர்கள் கோவிட் -19 தடுப்பூசி டோஸை எடுத்தனர்

0
462

வடக்கு மாகாண வைத்தியசாலைகள் ஊடாக மருத்துவ சேவையாளர்கள் உள்ளிட்ட சுகாதாரத் துறையினருக்கு கோவிட் -19 தடுப்பூசி மருந்து வழங்கும் நடவடிக்கையில் இன்றைய முதல் நாளில் 2 ஆயிரத்து 997 சேவையாளர்கள் டோஸ் பெற்றுள்ளனர். இது 30 சதவீத்ததினர் ஆகும்.

இவ்வாறு வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது;

வடக்கு மாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்களிலும் உள்ள வைத்தியசாலைகளில் பணியாற்றும் மருத்துவர்கள், தாதியர்கள், மருத்துவ சேவையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கும் கோவிட் -19 தடுப்பூசி மருந்து ஏற்றும் பணி இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த தடுப்பூசி மருந்து வழங்கலுக்கு வடக்கு மாகாணத்தில் 9 ஆயிரத்து 944 சுகாதாரத் துறை சேவையாளர்கள் தகுதி பெற்றனர்.

மூன்று நாள்களுக்கு முன்னெடுக்கப்படும் இந்தப் பணியில் முதல் நாளான இன்று 2 ஆயிரத்து 997 பேர் கோவில் -19 தடுப்பூசி மருந்தைப் பெற்றுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மட்டும் ஆயிரத்து 586 பேரும் கிளிநொச்சியில் 290 பேரும் மன்னாரில் 448 பேரும் வவுனியாவில் 360 பேரும் முல்லைத்தீவில் 313 பேரும் இன்று கோவிட் -19 தடுப்பூசி மருந்தைப் பெற்றனர்.

இரண்டாவது நாள் தடுப்பூசி மருந்து வழங்கல் நாளை முன்னெடுக்கப்படும் – என்றார்.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அத்தியட்சகர் மருத்துவர் கமலநாதனுக்கு கோவிட் -19 தடுப்பூசி மருந்து ஏற்றப்பட்டு பணி ஆரம்பித்து வைக்கப்பட்டது.