இலங்கையில் அநேக பிரதேசங்களில் கொவிட்சீல்ட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் இன்று முதல்…!

0
358

கொரோனா தடுப்பு கொவிட்சீல்ட் தடுப்பூசி நாட்டின் ஏனைய மாவட்டங்களில் செலுத்தும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பமாகவுள்ளது.

அந்த வேலைத்திட்டம் நேற்று மேல் மாகாணத்தில் பிரதான 9 வைத்தியசாலைகளில் ஆரம்பமானது.

இதன்போது 5,286 பேருக்கு தடுப்பூசில் செலுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஆயிரத்து 886 பேருக்கும், வடகொழும்பு போதனா வைத்தியசாலையில் 803 பேருக்கும், கொழும்பு தொற்று போதனா வைத்தியசாலையில் 781 பேருக்கும், இராணுவ வைத்தியசாலையில் 600 பேருக்கும், இந்த தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் பனாகொடை இராணுவ வைத்தியசாலையில் 400 பேருக்கும் ரிஜ்வே சீமாட்டி வைத்தியசாலையில் 382 பேருக்கும், இந்த தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

இதுதவிர ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் 190 பேருக்கும் முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் 108 பேருக்கும், ஐ.டி.எச் வைத்தியசாலையில் 80 பேருக்கும் வெலிசறை கடற்படை முகாமில் 56 பேருக்கும், கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, வட மாகாணத்தில் இன்று முதல் சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சிலிருந்து 11 ஆயிரத்து 80 கொவிட்-19 தடுப்பூசிகள் தங்களுக்கு கிடைத்துள்ளதாக அவர் எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.

இதேவேளை, காவல்துறையினருக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை நாளை முதல் ஆரம்பமாகின்றன.

காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த வேலைத்திட்டம் நாளை நாரஹேண்பிட்டி காவல்துறை வைத்தியசாலையில் இடம்பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.