உலக பேட்மிண்டன் போட்டி – 2வது ஆட்டத்திலும் சிந்து, ஸ்ரீகாந்த் தோல்வி

0
406

உலக டூர் இறுதி சுற்று பேட்மிண்டன் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள வீரர், வீராங்கனைகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனர்.

லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிப்பவர்கள் அரைஇறுதிக்கு தகுதி பெறுவார்கள். 2-வது நாளான நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் ‘பி’ பிரிவு 2-வது லீக் ஆட்டத்தில் உலக சாம்பியனும், தரவரிசையில் 7-வது இடத்தில் இருப்பவருமான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, 5-வது இடத்தில் உள்ள தாய்லாந்து வீராங்கனை ராட்சனோக் இன்டானோனை சந்தித்தார். 43 நிமிடம் நடந்த இந்த மோதலில் சிந்து 18-21, 13-21 என்ற நேர்செட்டில் ராட்சனோக்கிடம் தோல்வியை தழுவினார். முதல் செட்டில் ஒரு கட்டத்தில் 11-6 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை வகித்த சிந்துவால் அதனை தக்கவைத்து கொள்ள முடியாமல் போனது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 2-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீரர் இந்தியாவின் ஸ்ரீகாந்த் 21-19, 9-21, 19-21 என்ற செட் கணக்கில் போராடி சீன தைபே வீரர் வாங் ஜூ வெய்யிடம் வீழ்ந்தார். இந்த ஆட்டம் 1 மணி 18 நிமிடம் நீடித்தது. ஸ்ரீகாந்த் தனது முதல் ஆட்டத்தில் டென்மார்க் வீரர் ஆன்டோன்செனிடம் தோற்று இருந்தார்.

தொடர்ச்சியாக 2-வது தோல்வியை சந்தித்த சிந்து, ஸ்ரீகாந்த் ஆகியோர் அரை இறுதி வாய்ப்பை இழந்து வெளியேறினர்.