வேளாண் சட்டங்கள் மேலதிக உரிமைகளையும் வசதிகளையும் வழங்குகிறது- இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

0
364

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களும் விவசாயிகளின் உரிமைகள் மற்றும் வசதிகளைக் குறைக்கவில்லை என்றும், மாறாக புதிய வசதிகளையும் உரிமைகளையும் வழங்கியுள்ளதாகவும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

மத்திய வரவு செயலுத் திட்ட கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் உரையாற்றுகையில், “வேளாண் சட்டங்கள் விடயத்தில் உச்ச நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்புக்கு மத்திய அரசு கட்டுப்படும். வேளாண் சட்டங்கள் தொடர்பான சில முரண்பாடான தகவல்களை நீக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது.

விரிவான விவாதங்களுக்குப் பின்னரே நாடாளுமன்றத்தில் மூன்று வேளாண் சட்டங்களும் நிறைவேற்றப்பட்டன. இந்த மூன்று சட்டங்களையும் உருவாக்குவதற்கு முன்னர் விவசாயிகளுக்குக் கிடைத்த உரிமைகள் மற்றும் வசதிகள் குறைக்கப்படவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

உண்மையில் இந்தப் புதிய வேளாண் சீர்திருத்தங்களுடன் அரசாங்கம் விவசாயிகளுக்கு புதிய வசதிகளையும் உரிமைகளையும் வழங்கியுள்ளது.

விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலையை உறுதிசெய்வதே அரசின் கொள்கை ஆகும். மத்திய அரசு கொண்டுவந்த பயிர் காப்பீட்டுத் திட்டங்கள் மூலம் சிறு, குறு விவசாயிகள் பெரும் பலன் அடைந்துள்ளனர்.

விவசாயிகள் சமீபத்தில் ஒரு டிரக்டர் பேரணியை நடத்தியபோது வன்முறை ஏற்பட்டமை மற்றும் செங்கோட்டையில் தேசியக் கொடியை அவமதித்த சம்பவங்கள் நடந்தன. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.

இதேவேளை, நாடு முழுவதும் 22 புதிய எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அத்தடன், மூன்றாம் பாலினத்தோருக்கு சம உரிமைகள் அளிப்பதற்காக, பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அத்துடன், உலகிலேயே மிகப்பெரிய கொரோனா தடுப்பூசித் திட்டத்தை இந்தியா செயற்படுத்திக் கொண்டிருக்கிறது. இதில், இந்தியா முன்னிலையில் இருப்பதை உலகமே பாராட்டுகிறது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.