சர்வதேச சமூகத்திலிருந்து இலங்கை தனிமைப்படுத்தப்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கொவிட் நோய்த் தொற்றினால் மரணிப்போரை அடக்கம் செய்வது தொடர்பில் அரசாங்கம் எடுத்த தீர்மானம் தொடர்பில் சர்வதேச சமூகம் அதிருப்தி அடைந்துள்ளது.
இவ்வாறான கடுமையான தீர்மானங்களினால் மீண்டும் ஒரு தடவை இலங்கை சர்வதேச அரங்கில் தனிமைப்படுத்தப்படக்கூடிய அபாயம் நிலவி வருகிறது.
இவ்வாறான ஓர் சூழ்நிலையானது நாட்டின் எதிர்காலத்திற்குப் பாரதூரமாக அமையக் கூடும்.
அரசாங்கத்தின் சில செயற்பாடுகள் நாட்டின் பெரும்பான்மை மக்கள் அரசாங்கம் மீது கொண்டிருந்த நம்பிக்கையைச் சிதைவடையச் செய்துள்ளது.
சீனி வரி தொடர்பான ஊழல், வங்கிகளின் ஊடாக தங்களுக்கு நெருக்கமானவர்களுக்குக் கடன் வழங்கியமை உள்ளிட்ட சம்பவங்களைச் சிறிதாகக் கருதிவிட முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து அரசாங்கம் உரிய பதில்களை இதுவரையில் அளிக்கத் தவறியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.