இலங்கை வவுனியா ரி.ஐ.டி. கிளையில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த 17 பேருக்கு கொரோனா

0
358

ரி.ஐ.டி. எனப்படும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் வவுனியா கிளையில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்த 17 கைதிகள் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக வவுனியா சுகாதார பணிமனை தெரிவித்தது.

குறித்த ரி.ஐ.டி. கிளையில் 19 பேர் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு வந்துள்ள நிலையில் அவர்களில் 17 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தடுத்தி வைக்கப்ப்ட்டு விசாரிக்கப்பட்டுவரும், கிளினொச்சி – புனரின் பகுதியை சேர்ந்த சந்தேக நபர் ஒருவருக்கு முன்னெடுக்கப்பட்டுள்ள பி.சி.ஆர். பரிசோதனைகளின் போது அவருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இந்நிலையிலேயே முன்னெடுக்கப்பட்ட மேலதிக பி.சி.ஆர். பரிசோதனைகளில் மேலும் 16 பேருக்கு கொவிட் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், வவுனியா பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு கிளையில் சேவையாற்றும் பொலிஸார் உள்ளிட்டவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில் அனைவருக்கும் பி.சி.ஆர். பரிசோதனைகளை முன்னெடுக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.