மூன்றாம் பாலினத்தவர்களுக்கு கிடைத்த அங்கீகாரம்! அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றலாம்: ஜோ பைடன் உத்தரவு!

0
405

அமெரிக்க ராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் பணியாற்ற முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த தடையை நீக்கும் உத்தரவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டுள்ளார்.

கடந்த ஜன.20 ஆம் தேதி அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவி ஏற்றார். அமெரிக்க ஜனாதிபதியாக வாஷிங்டன் வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் வந்து அமர்ந்த முதல் நாளிலேயே ஜோ பைடன் செயல்பட தொடங்கி விட்டார். ஒரே நாளில் அவர் அதிரடியாக 15 நிர்வாக உத்தரவுகளை பிறப்பித்தார். அவற்றுள் பெரும்பாலானவை முன்னாள் அதிபர் டிரம்ப் கொண்டு வந்த தடைகளை நீக்கும் உத்தரவுகள் ஆகும்.  

மேலும் உலக சுகாதார அமைப்பு மற்றும் பாரிஸ் பருவ நிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணையும் என்று அறிவித்தார். மேலும், இஸ்லாமிய நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு விதிக்கப்பட்ட தடையையும், மெக்ஸிகோ சுவர் கட்டுமானத்திற்கும் தடை விதித்து அதிரடி காட்டினார்.

இந்நிலையில் அமெரிக்க ராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் பணியாற்ற முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த தடையை நீக்கும் உத்தரவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டுள்ளார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, மூன்றாம் பாலினத்தவர்கள் ராணுவத்தில் சேர வழிவகை செய்தார். ஒபாமாவின் இந்த உத்தரவை பின்னர் அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்ப் நீக்கினார். இதன் அடிப்படையில், அமெரிக்க ராணுவத்தில் ஏற்கனவே பணிபுரியும் மூன்றாம் பாலினத்தவர்கள் தொடர்ந்து பணி புரியலாம் என்றும், இராணுவத்தில் புதிதாக மூன்றாம் பாலினத்தவர்கள் சேர்வதற்கு தடைவிதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. 

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், “அமெரிக்காவில் பிறந்த அனைத்து தகுதியுள்ள மக்களும் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றலாம். உலகளவில் அமெரிக்கா வலிமையான, அனைவருக்கும் ஏற்ற நாடு. அதில் ராணுவம் எந்தவிதத்திலும் சளைத்தது இல்லை.  ராணுவத்தின் நலனுக்காகவும், தேசத்தின் நன்மைக்காகவும் தகுதிவாய்ந்த அனைத்து அமெரிக்க மக்களும் ராணுவத்தில் பணியாற்றலாம். பாலினத்தின் அடிப்படையில் ராணுவத்தில் எந்தப் பாகுபாடும் இருக்கக்கூடாது. தகுதியுள்ள அனைவரும் ,வெளிப்படையாகவும் பெருமையுடனும் சேவை செய்யும்போது அமெரிக்கா பாதுகாப்பாக இருக்கும், அதனால் மூன்றாம் பாலினத்தவர்கள் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார்.