கலாசார சீரழிவு நடவடிக்கையில் ஈடுபட்ட கும்பல் மானிப்பாயில் சிக்கியது; பொலிஸ் உத்தியோகத்தர் டீல் பேசி கைது செய்தார்

0
400

மானிப்பாய் பொலிஸ் பிரிவில் இளம் பெண் ஒருவரை பொலிஸ் உத்தியோகத்தருக்கே பணத்துக்காக ஒழுங்குபடுத்திய கும்பல் ஒன்று சிக்கியுள்ளது.

முச்சக்கர வண்டியில் நடமாடும் கலாசார சீரழிவில் ஈடுபட்டு வந்த பெண்கள் இருவர் உள்பட நால்வரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் 45 வயதுடைய மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், கோப்பாயைச் சேர்ந்த 20 வயதுடைய பெண்ணை வைத்து இந்த கலாசார சீரழிவை பணத்துக்காக முன்னெடுத்துள்ளார்.

அவர்களுக்கு உடந்தையாக முச்சக்கர வண்டி சாரதி ஒருவரும் நெல்லியடியைச் சேர்ந்த இளைஞன் ஒருவரும் செயற்பட்டுள்ளனர். அந்த நான்கு பேரும் இன்று புதன்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கலாசார சீரழிவு இடம்பெறுவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இரகசிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் ஊடாக கும்பலுடன் தொடர்பை ஏற்படுத்திய மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, அந்தக் கும்பலைச் சேர்ந்த நால்வரையும் கைது செய்துள்ளார்.

கைது செய்யப்பட்ட பெண் சிறுமிகளை வைத்து பணம் உழைப்பதாக கைது செய்யப்பட்டு 3 மாதங்கள் விளக்கமறியலில் இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்டவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நால்வரும் நடமாடும் கலாசார சீரழிவு கும்பல் என்று மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

சந்தேக நபர்கள் நாளை மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.