சுவிட்சர்லாந்திலும் கொரோனா தடுப்பூசிக்கு பக்க விளைவுகள்: எத்தனை பேர் உயிரிழந்துள்ளார்கள்?

0
541

உலகம் முழுவதும் பல நாடுகளில் கொரோனா தடுப்புசி போட்டுக்கொண்டவர்களுக்கு உயிரிழப்பு முதல் பல்வேறு பக்கவிளைவுகள் இதுவரை கண்டறியப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளன.

சுவிட்சர்லாந்தை பொருத்தவரை, சென்ற வார நிலவரப்படி இதுவரை தடுப்பூசி போட்டுக்கொண்ட 42 பேருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளதாக சுவிஸ் மருந்துக்கட்டுப்பாடு அமைப்பு தெரிவித்துள்ளது.

என்றாலும், அதனால் இதுவரை தடுப்பூசியின் நன்மைகள் எவ்விதத்திலும் பாதிக்கப்படவில்லை என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த கண்டுபிடிப்புகள் பைசர் மற்றும் மாடெர்னா ஆகிய இரண்டு நிறுவனங்களின் தடுப்பூசிகளுக்கும் பொருந்தும்.

பாதிக்கப்பட்ட 42 பேரில் 26 பேருக்கு சிறிதளவிலான பக்க விளைவுகளே ஏற்படுள்ளன. 16 பேருக்கு தீவிரமான பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளன, அவர்களில் 5 பேர் உயிரிழந்துள்ளார்கள்.

ஆனால் உயிரிழந்த ஐந்துபேருமே 84 முதல் 92 வயதுடையவர்கள் ஆவர். அத்துடன் அவர்கள் கொரோனா தடுப்பூசியால்தான் உயிரிழந்தார்கள் என்பதற்கான உறுதியான ஆதாரங்கள் இல்லை.