டிரம்ப்பின் வெளியேற்றம் சிறிலங்காவுக்கு ஒரு பாடம்

0
348

டிரம்ப்பின் தோல்வி, தொழிற்படுகின்ற அமெரிக்க அமைப்பின் சிறப்பு அடையாளம். இது சிறிலங்காவுக்கு ஒரு பாடம். நிறைவேற்று அதிகாரம், பாராளுமன்றம், நீதித்துறை, ஊடகத்துறை ஆகியவை ஒன்றை ஒன்று, திருத்தி, கட்டப்பாட்டுக்குள் கொண்டுவருமே தவிர, சிறிலங்காவைப் போல கூட்டு சேர்ந்து கும்மாளம் அடிக்காது என அமெரிக்கா நிரூபித்து விட்டது என கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஜனநாயக மக்கள் முன்னணி – தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, அமெரிக்க ஜனநாயக தேச அமைப்பின் ஏனைய தூண்கள், “ஆம் ஐயா” என்று நிறைவேற்று அதிகார ஜனாதிபதியிடம் சரணடையவில்லை. நீதித்துறையும், பாராளுமன்றமும், ஊடக துறையும் ஜனாதிபதி டிரம்பை வெளுத்து வாங்கி வெளியேற்றி உள்ளன. அமெரிக்காவின் ஜனநாயக அமைப்பு வென்றுள்ளது.

அமெரிக்காவின் தேர்தலை அடுத்த ஆட்சி மாற்ற குளறுபடிகளை பார்த்து, சிறிலங்காவின் பல பேரினவாத “அறிவாளிகள்” அமெரிக்காவை எள்ளி நகையாட தொடங்கினர். அமெரிக்காவை விட தங்களை, மிகப்பெரும் ஜனநாயகவாதிகளாக காட்ட முற்பட்டனர். உலகிற்கு அறிவுரை கூற அமெரிக்கா தகுதியற்றது எனக்கூறி தங்களது இனவாத அட்டூழியங்களுக்கு நியாயப்பாடுகளை தேட முற்பட்டனர். இன்று இவர்களுக்கு, நெற்றியில் அடித்ததை போல் அமெரிக்க ஜனநாயக அமைப்பு நிமிர்ந்து நிற்கிறது என்றார் மனோ கணேசன்.