அவதூறுகளை பரப்பி வருபவர்கள் என்னுடைய ரசிகர்களாக இருக்க முடியாது

0
510
Rajinikanth Statement Rajini Makkal mandram

ஊடகங்கள் மூலமாக நம்மைப் பற்றி அவதூறுகளை பரப்பி வருபவர்கள் தன்னுடைய ரசிகர்களாக இருக்க முடியாது என்று ரஜினி மக்கள் மன்ற தலைவர், நடிகர் ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார். (Rajinikanth Statement Rajini Makkal mandram)

மன்றத்தின் கொள்கைகளுக்கு முரணாக செயற்பட்டவர்களைத் தான் மன்றத்தில் இருந்து நீக்கி இருப்பதாகவும் நம் கொள்கைக்கு ஒத்து வராதவர்களை நம்முடன் வைத்திருப்பதில் அர்த்தம் இல்லை என்று ரஜினி குறிப்பிட்டுள்ளார்.

ரஜினி மக்கள் மன்ற தலைவர் இன்றைய தினம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

30, 40 வருடங்களாக ரசிகர் மன்றத்தில் இருந்தது மாத்திரதே மக்கள் மன்றத்தில் பதவி பெறுவதற்கோ, அரசியலில் ஈடுபடுவதற்கோ முழு தகுதி ஆகிவிட முடியாது.

சமூக நலனுக்காக நம்முடன் சேர்ந்து செயற்பட விரும்பும் பொது மக்களுக்கு பொறுப்புகளை வழங்கி நாம் அவர்களுடன் இணைந்து செயல்பட வேண்டும்.

அவ்வாறு, பொது மக்களுடன் மன்ற நிர்வாகப் பொறுப்புகளை பகிர்ந்து செயற்படாமல், கொடுத்த வேலையை தானும் செய்யாமல், துடிப்புடன் செயல்பட விரும்பும் உறுப்பினர்களை செயற்பட விடாமலும் தடுத்து, மன்றத்தின் கொள்கைகளுக்கு முரணாக செயல்பட்டவர்களைத் தான் மன்றத்தில் இருந்து நீக்கி இருக்கிறோம். நம்முடைய கொள்கைக்கு ஒத்து வராதவர்களை நம்முடன் வைத்திருப்பதில் அர்த்தம் இல்லை.

ரசிகர் மன்றத்தை விடுத்து மக்கள் மன்றத்தை நான் உருவாக்கியதன் நோக்கத்தை இவர்கள் மறந்துவிட்டார்கள் என்பதைத் தான் இது காட்டுகின்றது.

ஊடகங்கள் மூலமாக நம்மைப் பற்றி அவதூறுகளை பரப்பி வருபவர்கள் என்னுடைய ரசிகர்களாக இருக்க முடியாது. இப்படிப்பட்ட செயல்களில் நாம் கவனம் செலுத்தவேண்டிய அவசியம் இல்லை. வீண் வதந்திகளில் நமது நேரத்தை வீணடிக்க கூடாது.

மன்றத்திற்காக உண்மையாக உழைக்கும் எல்லோருடைய செயல்பாடுகளையும் நான் நன்கு அறிவேன். அந்த உழைப்பு வீண் போகாது.

அதற்கான பலனை இறைவன் நமக்கும், நம் நாட்டு மக்களுக்கும் தருவான் என்று நான் முழுமையாக நம்புகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags; Rajinikanth Statement Rajini Makkal mandram