பாலியல் குற்றச்சாட்டு; பெண் பத்திரிகையாளர் மீது மானநஷ்ட வழக்கு

0
465
MJ Akbar files criminal defamation case journalist

வெளியுறவுத்துறை இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய பெண் பத்திரிகையாளர் பிரியா ரமணி மீது அக்பரின் சட்டத்தரணி இன்று டெல்லி நீதிமன்றத்தில் குற்றவியல் மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். (MJ Akbar files criminal defamation case journalist)

பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவு தொடர்பான தகவல்களை ‘மீடூ’ என்ற பெயரில் டுவிட்டர் இணையத் தளத்தில் பகிர்ந்து வருகிறனர்.

அரசியல்வாதிகள், சினிமா துறை பிரபலங்கள் என பலரும் இந்த ‘மீடூ’ இந்தியா ஹேஷ்டேக் தகவல் பகிர்வுகளால் பாதிப்படைந்துள்ளனர்.

அவ்வகையில், பிரபல பத்திரிகையாளராக இருந்து பாரதிய ஜனதாவில் இணைந்து இப்போது மாநிலங்களவை எம்.பி மற்றும் இந்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் என பொறுப்பில் இருக்கும் எம்.ஜே.அக்பர் மீது பெண் பத்திரிகையாளர்கள் பாலியல் குற்றச்சாட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

அவர் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

ஆனால் மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பர் தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு எந்த பதிலையும் அளிக்காமல் உள்ளார்.

எனினும் அவர் விளக்கம் அளிக்க வேண்டும் அல்லது பதவியில் இருந்து இராஜினாமா செய்ய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகின்றது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், அரசுமுறைப் பயணமாக வெளிநாடு சென்றிருந்த அக்பர் நேற்று டெல்லி திரும்பினார்.

தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக நேற்று மாலை அறிக்கை வெளியிட்ட அவர், தனக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை, பொய்யாக ஜோடிக்கப்பட்டவை என்றும் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் இப்போது இத்தகைய முறைப்பாடுகள் எழுப்பப்படுவது ஏன்? என கேள்வி எழுப்பிய அக்பர்,

அடிப்படை ஆதாரங்களற்ற இந்த குற்றச்சாட்டுகளால் தனது நன்மதிப்புக்கு களங்கம் நேர்ந்துள்ளதாகவும், இதுதொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளை தனது சட்டத்தரணிகள் மேற்கொள்வார்கள் எனவும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, அக்பரின் சட்ட ஆலோசனை நிறுவனமான கரன்ஜாவாலா குழுமத்தை சேர்ந்த சட்டத்தரணிகள் எம்.ஜே. அக்பர் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய பெண் பத்திரிகையாளர்களில் ஒருவரான பிரியா ரமணி மீது டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் குற்றவியல் சட்டப்பிரிவுகளின் கீழ் இன்று மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளனர்.

தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags; MJ Akbar files criminal defamation case journalist