பாஜகவை வீழ்த்துவதே பிரதானப் பணி..! – சிபிஎம் மத்தியக்குழு அழைப்பு..!

0
483
main task BJP - CPM Central Committee call india tamil news

மக்களவைத் தேர்தலில் பாஜகவையும் அதன் கூட்டணிக் கட்சிகளையும் முறியடிப்பதே பிரதானப் பணி என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு அழைப்பு விடுத்துள்ளது.main task BJP – CPM Central Committee call india tamil news

கட்சியின் மத்தியக்குழுக் கூட்டம் அக்டோபர் 6, 7, 8 தேதிகளில் புதுதில்லியில் ஏ.கே.கோபாலன் பவனில் நடைபெற்றது.

பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளிட்ட அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள், மத்தியக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தின் நிறைவில் வெளியிடப்பட்ட அறிக்கையில், 2019 மக்களவைத் தேர்தல் மற்றும் தற்போது நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல்கள் தொடர்பாக வகுக்கப்பட்ட உத்தி குறித்து கூறப்பட்டிருப்பதாவது:

நடைபெறவிருக்கும் 2019 பொதுத் தேர்தல் குறித்து மத்தியக்குழு விவாதித்தது.

விலைவாசி உயர்வு, குறிப்பாக பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு, அதிகரித்துள்ள வேலையின்மை, ஆழமாகியுள்ள விவசாய நெருக்கடி என மக்கள் மீதான தாக்குதல்கள் மோடி அரசாங்கத்தின் கீழ் மிகவும் மோசமாக உக்கிரமடைந்துள்ள நிலையில், இத்தேர்தல் நடைபெறவுள்ளது. பெரும்பாலான மக்களின் வாழ்வாதார நிலைமைகள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது.

இத்தகு சூழ்நிலையில்தான் மதவெறித் தீயைக் கூர்மைப்படுத்தி விசிறிவிட நடவடிக்கை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

இதில் அப்பாவி மக்கள், குறிப்பாக தலித்துகள் மற்றும் முஸ்லீம்கள் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள்.

நாடாளுமன்ற அமைப்புகள் மற்றும் அரசமைப்புச் சட்டத்தின் கீழ் இயங்கும் அமைப்புகள் மூலமாகவும் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு எதிரான எதேச்சாதிகாரத் தாக்குதல்களும் தொடர்கின்றன.

இந்தியாவை, அமெரிக்காவின் ராணுவச் சூழ்ச்சிக் கூட்டணியில் இளைய பங்காளியாக மாற்றியிருப்பதன் மூலம் நாட்டின் இறையாண்மைக்கும் பாதுகாப்பிற்கும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது.

சுயேச்சையான அயல்துறைக் கொள்கையுடன் வளர்முக நாடுகளின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்திடும் என்பது அடிபட்டுவிட்டது.

இத்தகைய அரசியல் பின்னணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22ஆவது அகில இந்திய மாநாட்டில் உருவான புரிதலை மத்தியக்குழு மீண்டும் வலியுறுத்துகிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரி ஜனநாயக சக்திகள் முன் உள்ள பிரதானப் பணி என்பது வரவிருக்கும் 17ஆவது மக்களவைத் தேர்தலிலும், சட்டமன்றத் தேர்தல்களிலும் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை முறியடிப்பதேயாகும். இதன்படி கட்சியின் மத்தியக்குழு

கீழ்க்கண்டவற்றைப் பிரதானப் பணியாக தீர்மானித்திருக்கிறது :

(அ) பாஜக கூட்டணியை முறியடிப்பது;

(ஆ) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிகளின் பலத்தை மக்களவையில் அதிகரிப்பது;

(இ) மத்தியில் ஒரு மதச்சார்பற்ற மாற்று அரசாங்கம் அமைவதை உத்தரவாதப்படுத்துவது.

சட்டமன்றத் தேர்தல்கள்:

ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல்களில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்றத்தில் தன் பிரதிநிதித்துவத்தை வலுப்படுத்தும் விதத்தில் சில இடங்களில் போட்டியிடும்; இதர இடங்களில் பாஜகவைத் தோற்கடித்திட பிரச்சாரம் மேற்கொள்ளும்.

தெலுங்கானாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஆளும் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதியையும் பாஜகவையும் தோற்கடித்திட வேலை செய்யும். இதனை நிறைவேற்றிட, பகுஜன் இடது முன்னணி(பிஎல்எப்) பல இடங்களில் போட்டியிடும்.

இம்முன்னணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு முக்கியமான அங்கமாகும். பகுஜன் இடது முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடன் தற்சமயம் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது தேர்தல் சின்னத்தின்கீழ் 12 இடங்களுக்கு முதல் வேட்பாளர் பட்டியலை அறிவித்திருக்கிறது.

விரைவில் மற்றொரு பட்டியலையும் அறிவித்திடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :