பிரபாகரன் புதுப்பிறப்பாக படைக்கப்பட்டவர் – போராட்டம் இன்னொரு உருவம் எடுத்துள்ளது

0
748
Bishop Emmanuel comments ltte leader prabhakaran

ஈழப் போராட்டத்திற்காக புலம்பெயர்ந்த தேசங்களில் சேகரிக்கப்பட்ட நிதியை யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு வழங்குங்கள் என அருட்தந்தை இம்மானுவேல் அடிகளார் வலியுறுத்தியுள்ளார். (Bishop Emmanuel comments ltte leader prabhakaran)

யாழ். ஆயர் இல்லத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், 2009 இல் ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டம் மௌனித்து விட்டது. போராட்டத்திற்காக புலிகள் புலம்பெயர் நாடுகளுடன் தொடர்புகளை பேணி, பெருமளவு நிதி சேகரித்திருந்தனர்.

போராட்டம் முடிந்துள்ள நிலையில் அந்த பணம் இன்று வெளிநாட்டு வங்கிகளில் முடங்கியுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் புலிகளும், வன்னி மக்களும் இன்றும் வறுமையில் உள்ளனர். அவர்களின் வறுமையை போக்க அந்த நிதியை சரியாக பாவிக்க வேண்டும்.

நான் வடக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிடவுள்ளதாக சில இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. அதில் உண்மையில்லை.

முதலமைச்சர் விக்னேஸ்வரன் அண்மையில் என்னை நேரில் சந்தித்தபோது, நீங்கள்தானாம் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் என்று கூறப்படுகிறது என என்னிடம் கூறினார். நான் அரசியல்வாதியல்ல. அப்படியான எண்ணமும், நோக்கமும் எனக்கில்லை என கூறினேன்.

ஜனநாயக முறைக்கு வந்த பின்னர் எல்லோரும் பிரபாகரன் போன்று நடக்க முயற்சிக்கின்றனர். ஒருவருக்கொருவர் போட்டியும் சண்டையுமாக உள்ளது.

நான் மக்களிற்கு பொதுச்சேவையையே செய்ய விரும்புகிறேன். அரசியல்வாதியல்ல. புலம்பெயர் மக்களிடம் இருந்த பணப் பெருக்கை காட்டி கோயில், திருமண மண்டபம், ஹோட்டல் கட்டுவதே அதிகமாக உள்ளது.

பிரபாகரன் புதுப்பிறப்பாக படைக்கப்பட்டவர். அவரை மக்கள் மதித்தவர்கள். அவர் சொல்வதை அவ்வாறே மக்கள் செய்வார்கள். போர் முடிந்த பின்னர் அவர் அவ்வாறு செய்ய முடியாது. போராட்டம் இன்னொரு உருவம் எடுத்துள்ளது. இது சர்வதேச மயமாகப்பட்டது.

யுத்தத்தின் கடைசி காலங்களில் சிலர் பணம் சேர்த்துள்ளனர். சுவிஸில் பெருமளவிலானோர் புலிகளின் பணத்தை வைத்துள்ளனர். அவற்றின் பெருமளவிலான பணம் வீண்விரயம் செய்யப்படுகின்றது. சிலர் அந்தப் பணத்தை வைத்துக் கொண்டு பிரபாகரன் திரும்பி வருவார்.

அவர் இன்னும் சாகவில்லை. அவர் திரும்பி வந்தால் கொடுக்க வேண்டும். சுவிஸில் வீண்விரயம் செய்கின்றனர்.

இது மக்களின் பணிக்காக சேர்க்கப்பட்ட பணம். நான் புலிகளுடன் நெருக்கமாக வேலை செய்தேன். என்னைப் பார்த்து துரோகி என்று கூறுகின்றனர். பிரபாகரன் திரும்பி வந்தால் அவரால் பழையபடி எதுவும் செய்ய முடியாது. மக்களுக்காகவும் நாட்டுக்காகவும் நீங்கள் செய்வது தான் முக்கியம் என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Bishop Emmanuel comments ltte leader prabhakaran