‘அரோகரா’ கோஷம் விண்ணைப் பிளக்க ரத பவனி வந்தாள் நாகபூஷணி!

0
576

உலகெங்கிலுமுள்ள அறுபத்து நான்கு சக்தி பீடங்களில் ஒன்றாகிய நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவப் பெருவிழாவின் தேர் திருவிழா இன்றாகும்.

பல்லாயிரக்கணக்கான மக்கள் வெள்ளத்திலே அலங்கரிக்கப்பட்ட சித்திரத்தேர் ஏறி அடியார்களுக்கு அருள்பாலிக்கும் வண்ணமாக அம்பாள் வெளி வீதியுலா எழுந்தருளிய கோலம் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் புலம்பெயர் தேசங்களில் இருந்தும் வருகை தந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் இவ்விழாவில் கலந்துகொண்டு, வடம் பிடித்து தேரிழுத்தனர்.இம்மாதம் 14ஆம் நாள் கொடியேற்றத் திருவிழாவுடன் ஆரம்பமான நயினை நாகபூசணி அம்மன் ஆலய மகோற்சவத்தில் தொடர்ந்தும், சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெற்று, அம்மனும் முருகனும் பிள்ளையாரும் உள் வீதி உலா வந்தனர்.14ஆம் நாளான இன்று காலை 5 மணிக்கு அம்பாளுக்கு விசாட அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று கொடிக்கம்பத்திற்கு தீப பூஜை நடைபெற்றது.

தொடர்ந்து, காலை 7 மணிக்கு நயினை அம்மன், பிள்ளையார், முருகன் ஆகியோருக்கு வசந்த மண்டப பூஜை நடைபெற்று, உள்வீதி உலா இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து மூன்று கடவுளரும் தேரில் ஏற்றப்பட்டு ஆயிரக்கணக்கான பக்தர்களின் அரோகஹரா கோசத்துடன் முத்தேர்களும் வடமிழுக்கப்பட்டன.உலகின் அறுபத்து நான்கு சக்தி பீடங்களில் ஒன்றாகவும் வரலாற்றுச் நீட்சி கொண்ட தலமாகவும் விளங்கும் நயினை நாகபூசணி அம்மன் ஆலயம் ஈழத் தமிழர்களின் தொல்பொருள் பெருமையாகும்.கிறிஸ்துவுக்கு முற்பட்ட வரலாற்றுப் பாரம்பரியத்தினைக் கொண்ட நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயம் பல்வேறு காப்பிய ஆதாரங்களையும் சரித்திரப் பதிவுகளையும் கர்ணபரம்பரைக் கதைகளையும் தன்னகத்தே கொண்டமைந்துள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

Tag: Kaarai Nagar Amman Kovil Chariot Festival