தேசிய அரசாங்கத்திற்கு எதிராக குத்துக்கரணம் அடித்த ரணில் – சபையில் அம்பலப்படுத்திய சம்பந்தன்

0
549
Sampanthan demanded Deputy Speaker handed national government

(Sampanthan demanded Deputy Speaker handed national government)

தேசிய அரசாங்கத்தின் இணக்கப்பாட்டின் அடிப்படையில் சுதந்திர கட்சிக்கே பிரதி சபாநாயகர் பதவி வழங்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் சபையில் கோரிக்கை விடுத்திருந்தார்.

இருந்தபோதும், எதிர்க்கட்சிக்கு இரண்டு பதவிகள் வழங்க முடியாது, பிரதி சபாநாயகர் ஆளும் தரப்பின் ஒருவராகவே இருக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதிலளித்திருந்தார்.

இதன்போது, ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பி சபையில் கருத்து தெரிவித்த எஸ்.பி.திசாநாயக்க, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வசம் இருந்த பிரதி சபாநாயகர் பதவியிலேயே தற்போது வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.

எனவே, நாமே மாற்று நபரை நியமிக்க வேண்டும். ஆகவே எமது தரப்பில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளேவின் பெயரை நாம் பரிந்துரைக்கின்றோம் எனக் குறிப்பிட்டார்.

அதன் பின்னர் ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர் தினேஷ் குணவர்தன கூறுகையில்,

பிரதி சபாநாயகர் தெரிவில் நாடாளுமன்ற வரலாற்றில் ஒரு முக்கிய விடயத்தை இன்று எம்மால் செய்ய முடியும்.

பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பிரதி சபாநாயகராக இதற்கு முன்னர் கடமையாற்றிய வரலாறு இருந்ததில்லை.

எனவே, இந்தமுறை அவ்வாறான ஒரு தீர்மானம் எடுத்து வரலாற்றில் பதிய முடியும்.

ஆகவே சபையின் சகல உறுப்பினர்களும் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளேவிற்கு வாக்களித்து அவரை பிரதி சபாநாயகராக தெரிவு செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

இதன்போது, ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் கூறுகையில்,

தேசிய அரசாங்கம் உருவாக்கப்பட்டதன் பின்னர் சபையினை வழிநடத்தும் விதத்தில் சபாநாயகர் ஐக்கிய தேசியக் கட்சியிலும், பிரதி சபாநாயகர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலும், குழுக்களின் பிரதித் தலைவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து நியமிக்கப்படுவது என்ற இணக்கப்பாடு அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டது.

இப்போது, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வசம் இருந்த பிரதி சபாநாயகர் பதவி வெற்றிடமாகியுள்ள நிலையில் அவர்களின் ஒருவரை நியமிக்கின்றமையே முறையானது.

அவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் ஒருவரை நியமிக்கும் பட்சத்தில் நாம் அதற்கு பூரண ஆதரவினை வழங்கத் தயாராக உள்ளோம் எனக் குறிப்பிட்டார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஒழுங்குப் பிரச்சினை எழுப்பி கருத்துக்களை கூறுகையில்,

தேசிய அரசாங்கமாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நபர்கள் பிரதி சபாநாயகராக ஒருவரை தெரிவு செய்வதும், ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் சபாநாயகரை தெரிவு செய்வது என்ற இணக்கப்பாடு இருந்ததை மறுக்கவில்லை.

ஆனால் இந்த இரண்டு பதவிகளும் அரசாங்கத்தின் சார்பில் நியமிக்கப்பட வேண்டிய பதவிகளாகும்.

பிரதி சபாநாயகர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் இருந்தாலும் கூட அவர்களும் ஆளும் கட்சியாக இருந்தனர்.

எனினும், இப்போது அவர்கள் எதிர்கட்சியில் அமர்ந்துகொண்டு மீண்டும் பிரதி சபாநாயகர் பதவி தமக்கு வேண்டும் என கோருவது நியாயமற்ற காரணியாகும்.

பிரதி சபாநாயகர் மற்றும் குழுக்களின் பிரதி தலைவர் ஆகிய இரண்டு பதவிகளை எதிர்க்கட்சியினருக்கு வழங்க முடியாது. ஆகவே அரசாங்க தரப்பில் இருந்து ஒருவரை நியமிக்க வேண்டும். இதில் வேறு வழிமுறைகள் எதுவும் இல்லை எனக் குறிப்பிட்டார்.

மீண்டும் ஒழுங்குப் பிரச்சினை எழுப்பி பிரதமரின் கருத்துக்கு பதில் கூறிய எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன்,

பிரதமர் கூறும் கருத்துக்கள் ஏற்றுகொள்ளக்கூடியதாக இல்லை, சில தினங்களுக்கு முன்னர் பிரதமர் என்னுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசுகையில் பிரதி சபாநாயகர் குறித்து தெரிவித்திருந்தார். பின்னர் அவர் மனதில் வேறு எண்ணங்கள் எழுந்துள்ளன.

இவ்வாறு மாற்றம் பெற முடியாது. நியாயமாக பிரதி சபாநாயகர் பதவி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு வழங்கப்பட வேண்டும்.

அதுவே தேசிய அரசாங்கத்தின் இணக்கப்பாடு. அதுவே சரியானது என நாம் கருதுகின்றோம், எனவே பிரதி சபாநாயகர் பதவியை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிக்கு வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

மீண்டும் ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,

இரண்டு பொறுப்புகளை எதிர்க்கட்சிக்கு வழங்குவது அடிப்படையற்ற காரணியாகும். இணக்கப்பாடு என்னவாக இருந்தாலும் இப்போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் நியமித்துள்ள நபர்கள் எதிர்க்கட்சி ஆசனத்தில் உள்ளனர்.

ஆகவே எந்த காரணத்திற்காகவும் அவர்களுக்கு பதவியை வழங்க முடியாது.

மேலும், அரசாங்கத்தின் சார்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள நபர்களில் அனுபவம் மிக்க, நடைமுறைகள் தெரிந்த ஒருவரை நியமித்துள்ளனர்.

ஆகவே, அவரை நியமிப்பதே எமக்குள்ள ஒரே தெரிவாகும். இதில் தர்க்கிக்க முடியாது என குறிப்பிட்டார்.

இதன்பின்னர், இரகசிய வாக்கெடுப்பு நடத்த தீர்மானிக்கப்பட்ட போது பிரதான எதிர்க்கட்சியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகியன வாக்களிப்பில் பங்கு கொள்ளாது வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் நடத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் பரிந்துரைக்கப்பட்ட மொனராகலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த குமாரசிறி பிரதி சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

(Sampanthan demanded Deputy Speaker handed national government)

More Tamil News

Tamil News Group websites :