திட்டக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் மணல் கடத்தல்!

0
856
Sand smuggling night Thakurikkudi district

Sand smuggling night Thakurikkudi district

திட்டக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் மணல் திருட்டு நடந்து வருகிறது. இதை ஆட்சியர் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். திட்டக்குடி மாவட்டத்தில் உள்ள வெள்ளாற்றங்கரையோரத்தில் பெண்ணாடம், திருவட்டத்துறை, ஆவினங்குடி, திட்டக்குடி வதிஷ்ட்டபுரம், தருமகுடிகாடு, இடைச்செருவாய், ஆ.பாளையம், வாகையூர், அரங்கூர், ராமநத்தம், தொழுதூர், கீழக்கல் பூண்டி, கொரக்கவாடி உள்ளிட்ட கிராமங்களில் தினசரி மணல் கொள்ளை மாட்டுவண்டி, டிராக்டர், லாரிகள் மூலம் நடக்கிறது. மாட்டுவண்டிக்கு 300 ரூபாய் தாலுகா அலுவலகத்திற்கும், 300 ரூபாய் காவல்நிலையத்திற்கும் அளித்துவிட்டால் இரவு முழுக்க மணல் திருடுவதை அதிகாரிகள் கண்டுகொள்ளமாட்டார்கள். 600 ரூபாய் அதிகாரிகளுக்கு மாமூல் கொடுப்பதால் ஒரு மாட்டுவண்டி மணலின் விலை 1500 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

மேலும் இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். ஒரு இரவில் பத்திற்கும் மேற்பட்ட இடங்களில் 200 மாட்டுவண்டிகள், 50க்கும் மேற்பட்ட லாரி, டிராக்டர்கள் மூலம் மணல் திருட்டு நடக்கிறது. மாட்டு வண்டிக்கு 600 ரூபாய் என்பதுபோல லாரிக்கு 5 ஆயிரம் ரூபாய் வரையிலும், டிராக்டருக்கு 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் ரூபாய் வரையிலும் அதிகாரிகள் வசூலிக்கின்றனர். ஒரு நாளைக்கு லட்சக்கணக்கில் மாமூல் கிடைப்பதால் அதிகாரிகளும் கண்டுகொள்ளாமல் உள்ளனர். மணல் திருட்டை தடுக்க இரவில் இருக்கும் வருவாய்துறை ஊழியர்கள் வண்டிகளை பிடித்தாலும், மேலதிகாரிகள் உடனே குறுக்கிட்டு வண்டிகளை விட்டுவிடுங்கள் என உத்தரவிடுவதால் எப்படி மணல்திருட்டை தடுப்பது என புலம்பி வருகின்றனர்.

இது மட்டுமல்லாமல் வெலிங்டனில் வண்டல் மண், கிராவல் மண் திருட்டும் ஏகபோகமாக நடப்பதால் பண மழையில் நனையும் அதிகாரிகள் திருட்டு நடப்பதை மறைப்பதிலேயே கூடுதல் கவனம் செலுத்துகின்றனர். திட்டக்குடி காவல் துணை கோட்டத்தில் இருக்கும் சில காவல்துறை அதிகாரிகள் இரவு முழுக்க கண்விழித்து மணல் திருடுவதற்கு முழு பாதுகாப்பு கொடுக்கிறார்கள். இடைச்செருவாய் பகுதியில் சட்ட விரோதமாக ஒரு மணல் குவாரியே நடப்பதாகவும், அது முக்கிய புள்ளிகளுக்கு மணல் சப்ளை செய்ய பயன்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். சில காவல்துறை அதிகாரிகள் கூலிக்கு ஆள் வைத்துக் கொண்டு தாங்களே நேரடியாக மணல் கொள்ளையில் ஈடுபடுகின்றனர். இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வரை புகார் சென்ற நிலையிலும் அரசியல் புள்ளிகளின் சிபாரிசு காரணமாக புகார் மீது நடவடிக்கை இல்லாமல் ஓரம் கட்டப்படுகிறது. மணல் கடத்தலை தடுக்க சிறப்பு பிரிவு உருவாக்கியும், அவர்களையும் கவனிக்க வேண்டும் என ஒரு சில காவல்துறை அதிகாரிகள் கூடுதல் மாமூல் வசூலிக்கின்றனர். எனவே மாவட்ட ஆட்சியர் மணல் கடத்தலை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

More Tamil News

Tamil News Group websites :