வைரஸ் தொற்று அதிகரிப்பு; மக்களே அவதானம்; 14 பேர் பலி

0
882
Virus infection increased Warning people 14 killed

(Virus infection increased Warning people 14 killed)
ஹம்பாந்தோட்டையில் வைரஸ் தொற்றுடையவர்களின் எண்ணிக்கை 50 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக அந்த மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

தங்கல்ல, வலஸ்முல்ல மற்றும் திஸ்ஸமஹாராம ஆகிய இடங்களில் இந்த வைரஸ் தாக்கம் அதிகளவில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

தென்மாகாணத்தில் பரவியுள்ள வைரஸ் காய்ச்சல் காரணமாக முன்பள்ளிகளும் சில ஆரம்ப பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன.

உடுகம, மொவக்க, காலி, மாத்தறை, முலட்டியான, அக்குரஸ்ஸ, தங்கல்ல, வலஸ்முல்ல ஆகிய எட்டு கல்வி வலையங்களின் ஆரம்ப பாடசாலைகளே இதனால் மூடப்பட்டுள்ளன.

இந்த பாடசாலைகள் எதிர்வரும் திங்கட்கிழமையும் மூடப்பட்டிருக்கும் என்று மாகாண கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த வைரஸ் காரணமாக இதுவரையில் தென்மாகாணத்தில் 14 பேர் உயிரிழந்ததுடன், 400 பேர் வரையில் நோயுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

காலி, கராப்பிடிய போதனா வைத்தியசாலை, மாத்தறை, எல்பிடிய, கம்புறுப்பிடிய, தங்காலை, வலஸ்முல்ல ஆகிய வைத்தியசாலைகளில் இந்த வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்துள்ள சிறுவர்கள் நிவ்மோனியா நோயினாலும் முச்சுத் திணறலினாலும் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், குறித்த நோயாளிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் உடனே பெற்றுக்கொடுக்குமாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்கவிற்கு அண்மையில் உத்தரவிட்டுள்ளார்.

இந்த வைரஸ் காய்ச்சலினால் இலகுவில் பாதிக்கப்படக்கூடியவர்களான இரண்டு வயதுக்கு குறைவான குழந்தைகள், முன்பள்ளி சிறுவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார், சுவாச கோளாறு உள்ளோர் மற்றும் வயோதிபர்கள் ஆகியோருக்கு தற்காப்பு முறைகளைக் கையாளவும், பொது இடங்களில் மூக்கு, வாய் என்பவற்றை மூடும் வகையிலான பாதுகாப்பு அணிகலன்களை அணிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

காய்ச்சல், தலைவலி, மூக்குத் திணறல், சளி போன்ற நோய்களின் அறிகுறிகள் காணப்பட்டால், முன்பள்ளி மற்றும் தனியார் வகுப்புகளுக்கோ சிறுவர்களை அனுப்ப வேண்டாம் என சுகாதார சேவைகள் பணியகம் கேட்டுக்கொண்டுள்ளது.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Virus infection increased Warning people 14 killed