வீடு மற்றும் காணியை பெற்றுத் தருமாறு கோரி ஆர்ப்பாட்டம்

0
537

(Kotmale area People protest)
கொத்மலை நவதிஸ்பன மக்கள் காணி மற்றும் வீட்டைப் பெற்றுத்தருமாறு கோரி இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கொத்மலை பிரதேச செயலகத்திற்கு முன்னால் பல்வேறு வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை ஏந்திய வண்ணம், காணியையும், வீடுகளையும் அடிப்படை வசதிகளையும் பெற்றுத்தருமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நவதிஸ்பன கட்டுகல்ல, மொச்சகோட்டை ஆகிய பகுதியில் வாழ்ந்த 600 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு 1987 ஆண்டு மகாவலி அபிவிருத்தி திட்டம் முன்னெடுக்கப்பட்ட போது, சுமார் 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கி வெளியேற்றப்பட்டனர்.

இவ்வாறு வெளியேற்றப்பட்டவர்கள் பொகவந்தலாவ, நோர்வூட், மஸ்கெலியா, கந்தப்பளை, நுவரெலியா, தலவாக்கலை உள்ளிட்ட பிரதேசங்களில் குடியேறினர்.

தற்போது 39 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 90 இற்கும் மேற்பட்ட மக்கள் இப்பகுதியில் வாழ்ந்து வருகின்ற நிலையில், தமக்கான வீட்டைப் பெற்றுத் தருமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 01.07.2011 அன்று இவர்களுக்கு 20 பேர்ச்சஸ் காணி வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

இதில் பெரும்பான்மை மக்களுக்கு மாத்திரம் காணிகளை கொடுத்துள்ள நிலையில், ஏனையவர்களுக்கு இதுவரை காணி வழங்கவில்லை என்றும் இதனை துரிதமாக வழங்க வேண்டும் என்றும் இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இவர்கள் கடந்த பல வருட காலமாக அடிப்படை வசதிகள் இன்றி பல்வேறு துன்பங்களுக்கு முகம்கொடுத்து வாழ்ந்து வருவதாகவும், இதுகுறித்து பொறுப்பு வாய்ந்த பல அதிகாரிகளுக்கு அறிவித்த போதிலும் இதுகுறித்து எந்த விதமான முறையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

தேர்தல் காலங்களில் அரசியல்வாதிகள் வந்து தங்களின் பிரச்சினைகளை தீர்த்து தருவதாக தெரிவித்த போதிலும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் இதனால் தங்களது எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கை கூட பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை இதுகுறித்து உடனடியாக தமக்கு உரிய தீர்வு பெற்றுத்தர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

கொத்மலை பிரதேச செயலகத்தில் இன்று இடம்பெற்ற அபிவிருத்திக்குழு கூட்டத்திற்கு சென்ற பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கம், அபிவிருத்திக் குழு கூட்ட தலைவரும், மத்திய மாகாண உறுப்பினருமான அசோக ஹேரத், பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள் போன்றோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்களிடம் கலந்துரையாடினர்.

இதன்போது, ஆறு மாதத்திற்குள் இதற்கான முழுமையான தீர்வு கிடைக்கப்பெறும் எனவும், இதில் முதற்கட்டமாக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அமைச்சர் லக்ஷமன் கிரியெல்லவிடம் இதுதொடர்பில் பேச்சுவார்த்தை ஒன்று நடத்த ஏற்பாடு செய்யப்படும் எனவும் அபிவிருத்திக்குழுக் கூட்டத் தலைவரும், மத்திய மாகாண சபை உறுப்பினருமான அசோக ஹேரத் ஆர்ப்பாட்டகாரர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதன்போது உடனிருந்த பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கம் இதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததோடு, தான் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதாகவும் இதன்போது தெரிவித்துள்ளார்.

இதன்பின்னர் இவர்கள் வழங்கிய வாக்குறுதிக்கமைய ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்து சென்றனர்.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Kotmale area People protest