ஹட்டன் நகரில் உள்ள பிரதான வழிகளை மறித்து வாகன சாரதிகளும், ஆட்டோ ஓட்டுநர்களும், பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளதுடன், ஹட்டன் நகரம் பகுதியளவு ஸ்தம்பிதமடைந்துள்ளது.
இந்த போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
ஹட்டன் நகரிலுள்ள எரிபொருள் நிலையத்தில் டீசலை பெற்றுக்கொள்வதற்கு நேற்று (29.03.2022) மாலை முதல் சாரதிகள் காத்திருந்தனர். எனினும், இறுதி நேரத்தில் டீசல் இல்லையென அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் கடும் கோபமடைந்த சாரதிகள் பொதுமக்களுடன் இணைந்து ஹட்டன் மணிக்கூட்டு கோபுரம் சந்தியில் நேற்று (29.03.2022) இரவு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
பின்னர் காவல்துறையின் தலையீட்டுடன் போராட்டம் நிறுத்தப்பட்டது. இன்று காலை 9 மணிக்கு டீசல் விநியோகிக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.
எனினும், அந்த உறுதிமொழி மீறப்பட்டதால் சாரதிகள் வீதிக்கு இறங்கி போராடி வருகின்றனர். அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி வருவதுடன், இந்த அரசு வீடு செல்ல வேண்டும் எனவும் கோஷம் எழுப்பினர்.













