யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டிப் பகுதியில் அமைக்கப்பட உள்ள தனியார் வீடமைப்புத் தொகுதியால் அருகிலுள்ள வயல் நிலங்கள் உவராகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
இது தொடர்பில் பிரதேசவாசிகள் கருத்துத் தெரிவிக்கையில்,
வேலணை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட அலுமினியம் தொழிற்சாலைக்கு பின்புறமாக உள்ள தனியார் நிலப்பரப்பில் சுமார் 70 குடியிருப்புகளை கொண்ட வீட்டுத் தொகுதி அமைக்கப்படவுள்ளது.
குடியிருப்பு திட்டம்
சுமார் 4 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட உள்ள குறித்த வீட்டு தொகுதிக்கான வீதியானது உவர் நீர் தடுப்பணைக்கு அருகாமையில் வீதியின் அருகே அமைக்கப்படுகிறது.
பாரிய நிதிச் செலவில் அமைக்கப்பட உள்ள குடியிருப்பு திட்டத்திற்கு செல்லும் வீதிக்கு அருகில் உள்ள தடுப்பணையின் கீழ் பகுதியில் இருந்து மண் அகழ்வு இடம்பெறுவதால் கடல் நீர் உள்வரும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில் எதிர் காலத்தில் வயல் நிலங்களும் உவர்நீர் ஆகிவிடும்.
அதேவேளை அப்பகுதியில் நெற்பயிர் செய்கையை வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்ந்து வரும் குடும்பங்கள் முழுமையாகப் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாது குறித்த புதிய குடியிருப்பு தொகுதியில் நான்குக்கு மேற்பட்ட ஆழ்துளைக் குழாய் கிணறுகள் அமைக்கப்பட உள்ளதாக கூறப்படும் நிலையில் , அப் பகுதி முழுமையாக உவர்நீராக மாறும் சூழலும் ஏற்பட்டுள்ளது.
குறித்த திட்டத்துக்காக வேலனை பிரதேச செயலாளரின் அனுமதி உடன் அரச காணி ஒன்றின் கூடாக இரண்டாவது பாதை அமைக்கப்படவுள்ள நிலையில் வயல் நிலங்களில் இருந்து வெளியேறும் மேலதிக நீரின் திசைகள் மாற்றமடைவதுடன் நீர் தேங்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அதேவேளை சில மாதங்களுக்கு முன்னர் குறித்த திட்டத்துக்காக அப்பகுதியில் இருந்த பனை மரங்கள் வெட்டப்பட்டு இரவோடு இரவாக எரியூட்டப்பட்டதாக தெரிவித்த பிரதேசவாசிகள், சமவம் தொடர்பில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.