பிரித்தானிய தலைநகர் லண்டனில் உள்ள ஹோட்டல் ஒன்றில் £1,500,000 பெறுமதியான சொகுசு கார் இரண்டு வருடங்களாக கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டமை அப்பகுதி மக்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
லண்டனில் உள்ள St Pancras Renaissance ஹொட்டலுக்கு வெளியே இளஞ்சிவப்பு வண்ண McLaren 570s வகை சொகுசு கார் நிறுத்தப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளாக அந்த வாகனத்தை அதன் உரிமையாளர்கள் எடுத்துச் செல்லவில்லை என்றே கூறப்படுகிறது.
சமூக ஊடகங்களில் இது தொடர்பில் பதிவிட்டுவரும் அப்பகுதி இணையவாசிகள், எப்போது இந்த கார் இங்கிருந்து புறப்பட்டு செல்லும்? கொரோனா தொற்றுநோய் ஊரடங்கு காலம் மொத்தமும் இந்த கார் இங்கு தான் காணப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பலர் தங்கள் அன்றாட அனுபவத்தையும், அப்பகுதியில் தினசரி கடந்து செல்கையில் அந்த வாகனத்தை பார்வையிடுவதையும் குறிப்பிட்டுள்ளனர். ஒருசிலர் கூறுகின்றனர், அந்த கார் பயன்படுத்தப்பட்டு தான் வருகிறது, ஆனால் ஒரே இடத்தில், தினமும் அந்த கார் நிறுத்தப்படுவதால் குழப்பம் ஏற்படுகிறது என கூறியுள்ளனர்.