தென் கொரிய கூட்ட நெரிசலில் சிக்கி இலங்கை இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரது குடும்ப பின்னணி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையின் கண்டிப் பகுதியைச் சேர்ந்த 26 வயதான ஜினத் (Jinath) எனும் இளைஞனே உயிரிழந்தவராவார். பாத்திமாவுடன் (Fatima) எட்டு வருடக் காதல். பெற்றோரின் கடும் எதிர்ப்புக்குப் பின்னர் கடந்த ஜுலையில் தான் திருமணம் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.
குடும்ப பின்னனி
இந்நிலையில் கருவுற்ற நிலையில் உள்ள மனைவி. புற்றுநோய் பாதித்த தாயார், நீரிழிவு நோயாளியான தந்தை இப்படியான குடும்பப் பின்புலம் கொண்ட ஜினத் வருமானம் தேடி தென்கொரியாவுக்கு சென்றுள்ளார்.
ஜினத் சியோலுக்கு வந்து தொழில் தொடங்கியதும் மனைவி பாத்திமாவை அங்குள்ள பல்கலைக்கழகம் ஒன்றுக்கு அழைத்துப் படிப்பிப்பதற்கான முயற்சிகளைத் தொடக்கியிருந்தான்.
தாயின் புற்றுநோயைக் குணப்படுத்துவதும் வீடு ஒன்றைக் கட்டுவதும் அவனது கனவாக இருந்தது. எனினும் அவை அனைத்துமே அந்தக் ஹாலோவீன் கொண்டாட்டத்தில் கூட்டத்தோடு கூட்டமாகக் கலைந்து போயியுள்ளன. இந்தத் தகவல்களை ஜினத்தின் நண்பர்கள் “கொரியா ஹெரால்ட்” செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
ஜினத் எவ்வாறு சம்பவம் நடந்த இடத்துக்குச் சென்றான் என்பது நண்பர்களுக்குப் புரியவில்லை. இரவு விடுதிகள் அமைந்த அந்தப் பகுதிக்குச் செல்லும் வழக்கம் எதுவும் அவனிடம் கிடையாது என அவர்கள் கூறுகின்றனர். சனிக்கிழமை இரவு ஒன்பது மணிக்கு மேலாகியும் அவன் இருப்பிடம் திரும்பாததை அடுத்து அவனது கைபேசிக்கு அழைப்புக்கள் எடுக்கப்பட்டன.
எனினும் எதற்கும் பதில் இல்லை. தகவல்களை அறியும் நிலையங்களுடன் தொடர்பு கொண்ட நண்பர்களுக்குப் “பொறுங்கள்” என்ற பதில் மட்டுமே கிடைத்தது. மறுநாள் நகரில் உள்ள நிலக்கீழ் ரயில் நிலையம் ஒன்றில் அவனது கைத்தொலைபேசி கண்டுபிடிக்கப்பட்டது.
அதன்பிறகு சியோலில் உள்ள மருத்துவமனை (Boramae hospital) ஒன்றில் இருக்கிறான் என்ற தகவல் கிடைத்துள்ளது. எனினும் அங்கு அவன் உயிருடன் இல்லை என்பது பின்னரே தெரியவந்தது.
தென் கொரியத் தலைநகர் சியோலில் இதாவோன் (Itaewon) பகுதியில் நேர்ந்த நெரிசலில் இளவயதினர் 156 பேர் உயிரிழந்த சம்பவம் ஏற்படுத்திய துயரம் இன்னமும் தணியவில்லை.
இந்த சம்பவத்தால் நாடு முழுவதும் நவம்பர் 5 வரை தேசிய துக்கத்தை அரசு அறிவித்திருக்கிறது. அமெரிக்கா, பிரான்ஸ், சிறிலங்கா, சீனா என்று வெளிநாட்டவர்கள் பலரும் உயிரிழந்தவர்களில் அடங்குவதால் தவிர்த்திருக்கக்கூடிய அந்த அனர்த்தத்துக்காகத் தென்கொரிய அரசு மீது சர்வதேச ஊடகங்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.
இந்நிலையில் தவறை ஒப்புக் கொண்டு உள்துறை அமைச்சர் நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கோரியுள்ள நிலையில், மரண நெரிசலுக்கான மூல காரணத்தைக் கண்டறிவதற்குக் குழு ஒன்றை அமைத்துள்ள நாட்டின் எதிர்க் கட்சி, பொறுப்புத் தவறியமைக்காக அதிபர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.