இலங்கையில் ஏற்பட்ட மக்கள் புரட்சியால் தப்பியோடிய முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச, நிலையாக தங்கியிருக்க நாடு இன்றி தவித்து வருகிறார்.
ராஜபக்சர்களின் நட்பு நாடான மாலைதீவுக்கு தப்பிச் சென்ற கோட்டபாய, அங்கு ஏற்பட்ட மக்கள் எதிர்ப்பு காரணமாக சிங்கப்பூருக்கு சென்றார். அங்கும் அவருக்கு பல்வேறு நெருக்கடிகள் எழுந்துள்ளன. மக்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.
நெருக்கடியில் கோட்டபாய
இந்நிலையில் கோட்டபாயவை அங்கிருந்து வெளியேறுமாறு சிங்கப்பூர் அரசாங்கம் காலக்கெடு விதித்துள்ளது. இந்நிலையில் அவர் இலங்கைக்கு மீண்டும் திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது.
இதற்கான தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னெடுப்பார் என தெரிவிக்கப்பட்டது. எனினும் தற்போதைய நிலையில் கோட்டபாய இலங்கை திரும்புவதை விரும்பவில்லை எனத் தெரிய வருகிறது.
சிங்கபூரில் இருந்து சவுதி அரேபியாவுக்கு செல்வதற்கான நடவடிக்கைகள் அவர் முன்னெடுத்துள்ளார். இதற்கு ஆதரவினை அமெரிக்கா வழங்கி வருகிறது.
அமெரிக்காவின் பாதுகாப்பில் கோட்டபாய
அமெரிக்காவின் நட்பு நாடான சவுதியில் பாதுகாப்பான முறையில் கோட்டபாயவை தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சில காலம் அங்கு தங்கியிருக்கும் கோட்டபாய, இலங்கையிலுள்ள நிலைமைகளின் அடிப்படையில் சில மாதங்களில் நாடு திரும்புவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கோட்டபாய ராஜபக்ச தனது பதவி விலகல் கடிதத்தில் நாட்டுக்கு மக்களுக்கான தொடர்ந்தும் சேவையாற்றவுள்ளதாக தெரிவித்திருந்தார். தற்போதைய நிலையில் அடுத்த இரண்டு வருடங்களுக்கு ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக தொடரவுள்ளார்.
ராஜபக்சர்களால் ஜனாதிபதி ஆசனத்தில் அமர வைத்துள்ள ரணில் விக்ரமசிங்கவின் ஆதரவுடன் கோட்டபாய தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு உள்வாங்கப்படலாம் என பொதுஜன பெரமுன கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.