நோட்டோவில் பின்லாந்து இணைய விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்து இருந்த நிலையில் உக்ரைனுக்கு தேவையான போர் ஆயுதங்களை வழங்க இருப்பதாக பின்லாந்து அறிவித்துள்ளது.
உக்ரைன் ரஷ்யா போரானது நான்கு மாதங்களாக முடிவில்லாது நீண்டுவரும் நிலையில் ரஷ்யா ராணுவத்தின் தாக்குதலை எதிர்த்து உக்ரைனுக்கு தேவையான ஆயுதங்களை அமெரிக்கா பிரித்தானியா மற்றும் ஜெர்மனி போன்ற மேற்கத்திய நாடுகள் வழங்கி வருகின்றன.
இந்தநிலையில் பல ஆண்டுகளாக அணிச்சேரா கொள்கையில் இருந்த பின்லாந்து, உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்து ரஷ்யாவை எதிர்த்து போராட தேவையான போர் ஆயுதங்களை வழங்க இருப்பதாக கூறியுள்ளது.
இது தொடர்பாக பின்லாந்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட தகவலில் பின்லாந்து அரசு உக்ரைனுக்கு தேவையான போர் ஆயுதங்களை வழங்குவது குறித்த அனுமதியை பெற்று இருப்பதாக தெரிவித்துள்ளது.
எனினும் உக்ரைனுக்கு எத்தகைய ஆயுதங்கள் வழங்கப்படும் எவ்வாறு வழங்கப்படும் மற்றும் எந்தநாளில் வழங்கப்படும் போன்ற தகவல்கள் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட தகவலில் இடம்பெறவில்லை.
இருப்பினும், உக்ரைனுக்கு எத்தகைய ஆயுதங்கள் தேவைப்படுகிறதோ அதனை பின்லாந்து வழங்கும் என்று அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் இணைந்து பின்லாந்து ஜனாதிபதி Sauli Niinistö தோன்றிய போது நாங்கள் எங்களது நட்பு நாடுகளின் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் இணைந்து செயல்படுவதற்கு தயாராக இருப்பதாக அவர் தெரிவித்து இருந்தார்.