அமெரிக்க ராணுவத்தின் இரகசிய ஆவணங்களை வெளியிட்ட அசாஞ்சேவை நாடு கடத்த பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு

0
388

அமெரிக்க ராணுவத்தின் இரகசிய ஆவணங்களை வெளியிட்ட ஜூலியன் அசாஞ்சேவை (Julian Assange), நாடு கடத்த பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளின் போர் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் ஊழல்கள் தொடர்பான இரகசிய ஆவணங்களை ‘ஹேக்’ செய்து விக்கி லீக்ஸ் இணையதளத்தில் வெளியிட்டு ஜூலியன் அசாஞ்சே உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினர்.

இதேவேளை, இந்த விவகாரத்தில் அமெரிக்கா கொடுத்த நெருக்கடிகளின் காரணமாக கிட்டத்தட்ட 7 ஆண்டுகளாக பிரித்தானியாவில் உள்ள ஈகுவடார் தூதரகத்தில் பதுங்கியிருந்த ஜூலியன் அசாஞ்சே கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டார். 

பின்னர் அவர் தென்கிழக்கு லண்டனில் பெல்மார்ஷ் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதைத்தொடர்ந்து அசாஞ்சேவை தங்களிடம் ஒப்படைக்கக்கோரி அமெரிக்கா பிரித்தானியாவிடம் கோரிக்கை விடுத்தது. இருப்பினும் இதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது.  

இந்நிலையில் ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடு கடத்துவதற்கான முறையான உத்தரவை பிரித்தானியாவின் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் நேற்று பிறப்பித்தது.

இருப்பினும், அவரை நாடு கடத்துவது தொடர்பான இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம் பிரித்தானிய உள்துறை மந்திரி பிரீத்தி படேலிடம் உள்ளது குறிப்பிடத்தக்கது.