மோசமாக விமர்சிக்கப்படும் கனடா பிரதமர்: பிள்ளைகள் குறித்து கவலைப்படும் முன்னாள் மனைவி

0
39

அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் நாட்டை ஆள்பவருக்கு ஒரு மதிப்பு இருப்பதுபோல அவரது மனைவிக்கும் நாட்டின் முதல் பெண்மணி என்ற கௌரவம் வழங்கப்படுகிறது.

ஆனால் கனடா போன்ற நாடுகளில் அப்படி ஒரு தனிப்பட்ட கௌரவம் இல்லை. ஆகவே கனடா பிரதமரும் அவரது மனைவியும் விவாகரத்து செய்து பிரிந்தபோது அந்த விடயம் பெரிய அளவுக்கு நாட்டில் கவனம் ஈர்த்ததாகத் தெரியவில்லை.

இந்நிலையில் Closer Together: Knowing Ourselves, Loving Each Other என்னும் புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார் கனடா பிரதமரின் முன்னாள் மனைவியான சோபி ட்ரூடோ (Sophie Grégoire Trudeau).

அந்த புத்தக வெளியீட்டு விழாவின்போது தன் பிள்ளைகள் குறித்த சில விடயங்களை பகிர்ந்து கொண்டார் சோபி. ஒரு அரசியல்வாதியான ட்ரூடோவைக் குறிவைத்து ஆபாசமான ஒரு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. அவரை மோசமான வார்த்தைகளால் விமர்சித்து பதாகைகளும் கொடிகளும் உருவாக்கப்பட்டன.

அத்துடன், ட்ரூடோ, தூக்கு மேடையில் நிற்பதுபோலவும் அவர் அருகே அவரைத் தூக்கில் போடத் தயாராக ஒருவர் நிற்பதுபோலவும் போஸ்டர்கள் வெளியிடப்பட்டன.

அரசியல்வாதிகள் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் மண்ணை வாரித் தூற்றிக்கொள்வது அரசியலில் சகஜம்தான். ஆனால் தங்கள் தந்தையை மோசமாக விமர்சிக்கும் பதாகைகளையும் அவர் தூக்குமரத்தினருகே நிற்பது போன்ற புகைப்படங்களையும் பார்க்கும் சம்பந்தப்பட்டவர்களின் பிள்ளைகள் எவ்வளவு மன வேதனை அடைவார்கள்! இந்த விடயம் தன்னை கவலையில் ஆழ்த்தியுள்ளதாக தெரிவிக்கிறார் சோபி. ட்ரூடோ சோபி தம்பதியருக்கு Xavier (16), Ella-Grace (15) மற்றும் Hadrien (10) என்னும் மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள்.