ஹெலிகாப்டர் விபத்தில் கென்யாவின் ராணுவ தளபதி உட்பட 9 வீரர்கள் பலி: 3 நாள் துக்கம் பிரகடனம்

0
49

ஹெலிகப்டர் விபத்தில் கென்யாவின் இராணுவத் தலைவர் பிரான்சிஸ் ஒகோல்லா உட்பட 09 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து எல்ஜியோ – மராக்வேட் பகுதியில் இன்று வியாழக்கிழமை பிற்பகல் இடம்பெற்றதாக சர்வதேச ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கென்யாவின் வடக்கு பகுதியை பார்வையிடுவதற்கும் பாடசாலை சீரமைப்புப் பணிகளை கண்காணிப்பதற்காக பயணித்த போது இந்த விபத்து இடம்பெற்றதாக கென்ய ஜனாதிபதி வில்லியம் ரூட்டோ அறிவித்துள்ளார்.

இந்நிலையில் விபத்துக்கான காரணத்தை கண்டறிய விபத்து சம்பவித்த பகுதிக்கு புலனாய்வு பிரிவினர் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தை தொடர்ந்து கென்ய ஜனாதிபதி தேசிய பாதுகாப்பு சபையின் அவசரக் கூட்டத்தை நைரோபியில் கூட்டியதாக ஜனாதிபதியின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

“மிகவும் வீரம் மிக்க தளபதிகளில் ஒருவரை நாடு இழந்துவிட்டது. துணிச்சலான அதிகாரிகள், படைவீரர்கள் மற்றும் பெண்களையும் இழந்துவிட்டோம்.

கென்யா பாதுகாப்புப் படைகளின் சகோதரத்துவத்திற்கு இது ஒரு சோகமான தருணம் மற்றும் இது தேசத்திற்கு மிகவும் துரதிஷ்டவசமான நாள்” என கென்ய ஜனாதிபதி இவ்வாறு கவலை வெளியிட்டுள்ளார். மேலும் கென்யாவில் நாளை (19) முதல் மூன்று நாட்களுக்கு துக்க தினம் அனுஷ்டிக்கப்படும் என அறிவித்துள்ளார்.