முல்லைத்தீவில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வைகாசிப் பொங்கல் விழா நேற்றைய தினம் (05-06-2023) மிகச் சிறப்பாக நடைபெற்றுள்ளது.
இந்த பொங்கல் விழாவில் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
நாட்டில் பல இன, மத மக்கள் வாழ்ந்தாலும் ஒவ்வொரு இனத்தவர்களிலும் சிலர் வேறு இன வழிபாடுகளில் கலந்து கொள்வதும் அவர்களின் தெய்வங்கள் மீது நம்பிக்கை கொள்வதும் பெரும்பாலான சந்தர்பங்களில் பார்க்க கூடிய ஓர் நிகழ்வாகவே உள்ளது.
அந்தவகையில், வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வைகாசிப் பொங்கல் விழாவில் பரவக்காவடி சுமந்து வந்த ஒருவருக்கு முஸ்ஸிம் சகோதர இனத்தை சேர்ந்த ஒருவர் பரவக்காவடி சுமந்தவருக்கு நீர் ஊற்றி அவரது வழிப்பாட்டிற்கு மதிப்பளித்துள்ளமை பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பரவக்காவடி சுமந்து வருபவர்களின் களைப்பை போக்குவதற்கும் அவர்களின் அருள்வாக்கை பெறுவதற்கும் அவர்கள் மீது நீர் ஊற்றி வழிபாடு செய்யும் முறைமை ஒன்று காணப்படுகின்றது.
நாட்டில் இனவாதம் என்ற விடயம் பலர் மத்தியில் பேசுப்பொருளாக மாறியுள்ள காலகட்டத்தில் இந்துக்களின் வழிபாட்டில் சக இன, மத மக்கள் பங்கேற்பதும் இவ்வாறான நெகிழ்ச்சியான விடயங்களை செய்வதும் இன, மத, மொழிக்கு அப்பால் மனிதம் இன்றும் மரணிக்கவில்லை என்பதை நிரூபித்துள்ளது.