தற்கொலைக்கு முயன்ற இரு இலங்கையர்களுக்கு புகலிடம் வழங்கிய நாடு!

0
244

இலங்கையில் இருந்து பிரித்தானியாவிற்கு சென்று அடைக்கலம் கோரிய இரு இலங்கையர்கள் சன் டியாகோவிற்கு அனுப்பட்ட நிலையில் டிக்கோ கார்சியா தீவில் தற்கொலைக்கு முயற்சி செய்த காரணத்தால் இந்த மாத ஆரம்பத்தில் ருவாண்டாவில் இருந்து பிரித்தானியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டு இப்போது மூன்றாவது நாடு ஒன்றில் அடைக்கலம் வழங்குவதற்கு பிரித்தானிய அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, அவர்களுடைய ஆவணங்களின்படி அவர்கள் மீண்டும் இலங்கைக்கு செல்ல மாட்டோம் எனவும் அவ்வாறு சென்றால் இலங்கையில் கொலை செய்யப்படுவோம் எனவும் அச்சம் இருப்பதாக கூறி இலங்கைக்கு செல்வதற்கு மறுத்துள்ளனர்.

இதன் காரணமாக இப்போது மூன்றாவது நாடு ஒன்றில் அடைக்கலம்/அகதிகளாக உரிமை வழங்குவதற்கு பிரித்தானியா தீர்மானித்துள்ளது.

இந்த மூன்றாவது நாடு எது என்பது இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை. 2021 ஓக்டோபரில் டியாகோ கார்சியாவுக்கு வந்த முதல் 89 தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களில் ஹம்ஷிகா கிருஷ்ணமூர்த்தி, வயது 22, மற்றும் அஜித் சஜித்குமார், வயது 22 ஆகிய இரு அடைக்கலம் கோரும் நபர்களும் அடங்குவர்.

அவர்களின் படகு தீவுக்கு அருகில் உடைந்து, அவர்கள் பிரிட்டிஷ் படைகளால் மீட்கப்பட்டனர். 2022 இல் இலங்கையில் இருந்து சென்ற புகலிடக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 200 ஆக உயர்ந்தது.

ஆனால் பலர் இலங்கைக்குத் திரும்புவதற்கு பிரித்தானியா அரசாங்கம் வழங்கிய பணத்தை ஏற்றுக் கொண்டு மீண்டும் நாடு திரும்புவதற்கு சம்மதித்தனர்.

வேறு சிலர் தாங்களாக முன்வந்து பிரான்ஸ் தீவான ரியூனியனில் தஞ்சம் கோருவதற்கு ஒப்புக்கொண்டனர். எஞ்சிய 68 புகலிடக் கோரிக்கையாளர்களில், 26 ஆண்டுகால உள்நாட்டுப் போரின் போது சுதந்திரத்திற்காகப் போராடிய பிரிவினைவாதக் குழுவுடன் தொடர்பு இருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டு இலங்கை பாதுகாப்புப் படையினரால் சித்திரவதை செய்யப்பட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக கூறும் பலர் உள்ளடங்கியுள்ளனர்.

சிங்களவர்கள் ஆதிக்கம் செலுத்தும் இலங்கை அரசாங்கத்தில் தமக்கு பாதுகாப்பு இல்லை என அவர்கள் கருதுகிறார்கள்.

இப்போது 50 க்கும் மேற்பட்டோர்களது தஞ்சம் கோரும் கோரிக்கைகளை பிரித்தானிய அதிகாரிகளால் மதிப்பீடு செய்திருந்தாலும், பெரும்பாலானவர்கள் நிராகரிக்கப்பட்டனர்.

அவர்களின் நிராகரிப்பு கடிதங்களில் “நீங்கள் இலங்கைக்கு திரும்புவதற்கு உத்தரவு வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

” ருவாண்டா தலைநகர் கிகாலியில் உள்ள ருவாண்டா ராணுவ மருத்துவமனையில் இருந்து வாட்ஸ்அப் மூலம் ஊடகம் ஒன்றிற்கு கிருஷ்ணமூர்த்தி தற்போதைய பிரித்தானிய அரசாங்கத்தின் தீர்மானம் தொடர்பாக குறிப்பிடும்போது, “நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன், ஆனால் அதே நேரத்தில், இன்னும் எவ்வளவு காலம் இந்த மகிழ்ச்சி நீடிக்கும் என்று கவலைப்படுகிறேன்” எனக் கூறியுள்ளார்.

இரண்டு புகலிடக் கோரிக்கையாளர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் லண்டனை தளமாகக் கொண்ட Jein Solicitors இன் மூத்த சட்ட ஆலோசகர் கீத் குலசேகரம், குறித்த இருவரையும் டியாகோ கார்சியாவிற்கு மீண்டும் கொண்டு வருவதைத் தடுக்க பிரித்தானியாவில் உள்ள ஒரு நீதிபதியிடம் தடை உத்தரவைக் கோருவதாகக் கூறியுள்ளார்.

ருவாண்டாவில் உள்ள மருத்துவ நிபுணர்களின் கருத்துக்கள் இருவரும் புகலிடம் கிடைப்பதில் முக்கிய பங்கு வகித்ததாக அவர் கூறியுள்ளார்.

“இருவருக்கும் வலுவான மருத்துவ ஆதாரங்களை நாங்கள் ஏற்கனவே சமர்ப்பித்துள்ளோம், அவர்கள் தீவிரமான மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் தற்கொலைக்கான எண்ணத்துடன் இருப்பதால் அதிக ஆபத்தில் உள்ளனர் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்” என அவர் ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார்.

“டியாகோ கார்சியாவில் தற்போது பரிசீலிக்கப்படும் ஏனைய விண்ணப்பங்கள் தொடர்பில் இந்த நிகழ்வு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நான் நம்புகிறேன்,” என்று அவர் மேலும் கூறினார்.

படகுகளில் ஆங்கிலக் கால்வாயைக் கடப்பதைத் தடுப்பதற்காக, புகலிடக் கோரிக்கையாளர்களின் உரிமைகளைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்ட “சட்டவிரோத குடியேற்ற மசோதா” பிரித்தானிய அரசாங்கத்தினால் இம்மாதம் நிறைவேற்றப்பட்டது. இது உரிமைக் குழுக்கள் மற்றும் ஐ.நா மூலம் விமர்சனத்துக்கு உள்ளானது.

கடந்த ஆண்டு 20 ஆண்டுகளில் அதிகபட்சமாக 45,000 புகலிட விண்ணப்பங்களை பிரித்தானியா பதிவு செய்திருந்தாலும், புதிய சட்டத்தினை விமர்சித்த குழுக்கள் இந்த எண்ணிக்கை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் சராசரியை விட மிகக் குறைவாக இருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பிரித்தானியாவிற்கு சொந்தமான இந்தியப் பெருங்கடல் பகுதியின் பகுதியான டியாகோ கார்சியாவில் நிரந்தர குடிமக்கள் இல்லை, 1960கள் மற்றும் 1970களில் பூர்வீக சாகோசியன் மக்களை, இங்கிலாந்து பிரித்தானிய-அமெரிக்க கூட்டு இராணுவத் தளத்தை உருவாக்குவதற்காக வெளியேற்றியது.

கடந்த 18 மாதங்களாக, புகலிடக் கோரிக்கையாளர்கள் தீவில் உள்ள வேலியிடப்பட்ட முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர், அங்கு பலர் உணவு மற்றும் மருத்துவ சேவைகள் போதுமானதாக இல்லை என்றும், தகவல் தொடர்புகள் துண்டிக்கப்படுவதும் வழக்கமாக உள்ளது எனவும் முறைப்பாடு செய்து வருகின்றனர்.

தீவில் உள்ள டஜன் கணக்கான புகலிடக் கோரிக்கையாளர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட மாட்டோம் என்று உறுதியளிக்கக் கோரி பல உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்தியுள்ளனர்.

கடந்த செப்டம்பரில், BIOT ஆணையாளர் Paul Candler, புகலிடக் கோரிக்கையாளர்களிடம், எவரும் பிரித்தானியாவில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும், பாதுகாப்பற்றவர்கள் என்று கருதப்படுபவர்களை “பாதுகாப்பான மூன்றாவது நாட்டிற்கு” அழைத்துச் செல்ல அனுமதிக்கும் வகையில் பிரதேசத்தின் சட்டம் மாற்றப்பட்டுள்ளது என்றும் கூறியிருந்தார்.

கிருஷ்ணமூர்த்தியும், சஜித்குமாரும் மார்ச் 1ஆம் திகதி, இலங்கைக்கு வந்திருந்த பிரித்தானிய அரசு அதிகாரி, இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று கூறியதை அடுத்து, கூர்மையான உலோகப் பொருட்களை விழுங்கி தற்கொலைக்கு முயன்றனர்.

மேலும் மூன்று புகலிடக் கோரிக்கையாளர்கள் மார்ச் 13 அன்று இதே வழியில் தற்கொலைக்கு முயன்றனர். ஐந்து பேரும் மருத்துவ மற்றும் மனநல சிகிச்சைக்காக ருவாண்டாவில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.