தமிழர் தேசமான ஈழப் பிரதேசம் தொடர்பாக ஐ.நா விடம் முறையிட்ட கஜேந்திரகுமார்!

0
233

சிறிலங்காவில் ஆயுத மோதல் முடிவிற்கு வந்து 13 ஆண்டுகள் ஆகியிருக்கும் இந்நிலையில் இலங்கையின் தமிழர் தாயகமான வடக்கு கிழக்கில் சிங்கள பெளத்தமயமக்கல் பெரும் வேகமெடுத்துள்ளது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஐ.நா மனித உரிமை பேரவையில் ஆற்றிய உரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை சிறிலங்காவின் நீதிமன்ற கட்டளையினை மீறி தமிழரின் தொன்மையான வழிபாட்டிடமான குருந்தூர் மலையானது அழிக்கப்பட்டு அங்கு ஒரு பெளத்த விகாரை கட்டப்பட்டிருக்கிறது.

இப்படியாக தமிழர் தாயகமெங்கிலும் குறிப்பாக சிங்களவர்கள்/ பெளத்தர்கள் இயல்பாக குடியிருக்காத பகுதிகளில் கூட பெளத்த மத ஆலயங்கள் சிறிலங்கா அரச இயந்திரத்தின் துணையுடன் அமைக்கப்பட்டு வருகின்றன.

நாயாறு, தையிட்டி , நாவற்குழி, மாங்குளம் சந்தி, கச்சல் சமளங்குளம், கன்னியா வெந்நீரூற்று என்பன இவ்வாறு தமிழர் தாயக நிலத்தில் பெளத்த ஆலயங்கள் அமைக்கப்பட்டுவரும் சில இடங்களாகும்.

இவற்றுள் பெரும்பாலனவை சிறிலங்கா அரச ஆதரவோடு தமது அரசின் நீதிமன்ற கட்டளைகளை தாமே மதிக்காது உதாசீனப்படுத்தி கட்டமைக்கப்பட்டு வரும் ஆலயங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்தோடு சில இடங்களில் இந்த சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட பெளத்த ஆலயங்களை சூழ இருக்கும் பகுதிகளில் தமிழர் தாயகத்தின் இனப்பரம்பலை திட்டமிட்டு மாற்றியமைக்கும் முனைப்போடு சிறிலங்கா அரச ஆதரவுடன் சிங்கள குடியேற்ற  திட்டங்களும் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மயிலத்தமடு மற்றும் மாதவனை மேய்ச்சல் நிலங்களில் தமிழர்கள் காலங்காலமாக 300,000 க்கும் மேற்பட்ட கால்நடைகளுடன் மேய்ச்சலுக்குப் பயன்படுத்திவரும் நிலையில் நீதிமன்ற உத்தரவை மீறி அங்கு சட்டவிரோதமான முறையில் சிறிலங்கா அரச ஆதரவோடு சோளப்பயிர்ச் செய்கையில் ஈடுபட்டு வரும் சிங்களவர்களால்  தமிழர்கள் மேய்ச்சல் நிலங்களில் இருந்து துரத்தப்படுகின்றனர். உண்மையில் இந்த தமிழர்களின் பாரம்பரிய – புராதன அடையாள நிலமானது சிங்கள பெளத்தமயமாக்கலுக்கான பகுதியாக சிறிலங்கா அரசினால் குறிவைக்கப்பட்டு அங்கு இனப்பரம்பல் மாற்றப்பட்டு வருகிறது.

தமிழர் தேசமான ஈழப்பகுதி தொடர்பில் ஐ.நாவில் வேண்டுகோள் விடுத்த கஜேந்திரகுமார்! | Gajendra Kumar Un The Tamil Nation Eelam Region

‘மாதுரு ஓயா வலதுகரை அபிவிருத்தி திட்டம்” எனும் பெயரில் நடைமுறைப்படுத்தப்படும் திட்டமானது அந்தபகுதியில் இருக்கும் தமிழர்கள் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டு சிங்களவர்களை குடியேற்றி இனப்பரம்பலை மாற்றவே சிறிலங்கா அரசினால் பயன்படுத்தப்படுகிறது.

புராதன தமிழ் சைவ வழிப்பாட்டிடமான வெடுக்குநாறி மலையினை பெளத்த புராதன பிரதேசமாக மாற்றியமைத்து பிரகடனப்படுத்தும் நோக்குடன் அப்பகுதியை சிறிலங்கா அரசின் தொல்பொருட் திணைக்களம் கையகப்படுத்தியிருக்கிறது.

ஆயுத மோதல் முடிவிற்று 13 ஆணடுகள் கடந்த நிலையிலும் நடைமுறையில் தமிழர்கள் மீது சிறிலங்கா அரசினால் திட்டமிட்டு  கட்டமைக்கப்பட்ட கலாசார இனவழிப்பும் முனைப்புடன் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது என்பதை உங்கள் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன்’ என அவர் தெரிவித்துள்ளார்.