முல்லைத்தீவில் மீனவனை மரத்தில் கட்டி வைத்து சித்திரவதை செய்த கும்பல்!

0
215

முல்லைத்தீவு – கொக்குளாய் கருநாட்டக் கேணியில் கடற்கரையில் கரைவலைத் தொழிலில் இருந்து தப்பிச் சென்றார் எனத் தெரிவித்து அங்கு பணியாற்றிய மீனவர் ஒருவரை கட்டி வைத்து சித்திரவதைக்கு உட்படுத்தியுள்ளனர்.

கருநாட்டுக்கேணியில் தென்னிலங்கையர் நடத்தும் தொழிலில் பணியாற்றும் மட்டக்களப்பைச் சேர்ந்த ஒர் இளைஞர் பணி செய்ய விருப்பம் இன்றி அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

இவ்வாறு வெளியேறிய இளைஞரை விரட்டிப் பிடித்து மரத்தில் கட்டி வைத்ததோடு அதில் இருந்தும் தப்பிக்காத வண்ணம் வலையினாலும் கட்டியுள்ளனர். இவ்வாறு கட்டப்பட்ட இளைஞர் காலை முதல் மாலைவரை கொழுத்தும் வெய்யிலிலும் காணப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவில் மீனவனை மரத்தில் கட்டி வைத்து சித்திரவதை செய்த கும்பல்! | Gang Tied Fisherman Tree Tortured Him Mullaitivi

இதேவேளை இந்த கரைவலைப் பாட்டுத் தொழிலில் இணைந்த பலர் தொழில் நெருக்கடி காரணமாக இடையில் விலகிச் செல்வதே இதற்கு காரணம் எனவும் அதனால் மனிதாபிமானம் அற்ற வகையில் இவ்வாறு சித்திரவதை இடம்பெறுவதாக அயலில் உள்ள மீனவர்கள் தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் அறிந்த பிரதேச செயலாளர் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் கட்டி வைத்திருந்த மீனவரின் சொந்த ஊரான மட்டக்களப்பிற்கு வாடிஉரிமையாளரே அழைத்துச் சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இந்த வாடியின் உரிமையாளரும் தென்னிலங்கையைச் சேர்ந்தவர் என்பதனால் இவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காது தொலைபேசியிலேயே பொலிஸார் தொடர்பு கொள்வார்களே அன்றி நேரில் செல்லமாட்டார்கள் என அயலில் உள்ள மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.