இந்த அரசில் மீண்டும் பிரதமர் பதவியைப் பொறுப்பேற்கும் எண்ணம் மஹிந்த ராஜபக்சவுக்கு இல்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
அரசின் கட்டமைப்பைச் சீர்குலைக்க முயற்சிப்பவர்கள் நாளுக்கு நாள் வதந்திகளை வெளியிடுவார்கள் எனவும் ஜனாதிபதி கூறினார்.

ரணில் விக்கிரமசிங்கவிடம் கேள்வி
மஹிந்த ராஜபக்சவை மீண்டும் பிரதமராக்குவதற்கு பொதுஜன பெரமுனவினர் அழுத்தம் கொடுப்பதாக தென்னிலங்கை ஊடகங்களில் வெளியான செய்திகள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் எழுப்பிய கேள்விக்கே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
“தற்போதைய பிரதமர் தினேஷ் குணவர்த்தனவுக்கு ராஜபக்ச தரப்பிலிருந்து எந்த அழுத்தமும் இல்லை. மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பிரதமர் தினேஷ் குணவர்த்தனவுக்கு முழு ஆதரவு வழங்குகின்றது.

பொதுஜன பெரமுனவின் நம்பிக்கையை வென்ற சிறந்த அரசியல்வாதி என்றபடியால்தான் தினேஷ் குணவர்த்தனவை இந்த அரசாங்கம் பிரதமராக நியமித்தது.
இந்நிலையில் அரசின் கட்டமைப்பைச் சீர்குலைக்க முயற்சிப்பவர்கள் நாளுக்கு நாள் வதந்திகளை வெளியிடுவார்கள். அதில் ஒன்றுதான் மீண்டும் பிரதமர் பதவியை மஹிந்த ராஜபக்ச பொறுப்பேற்கவுள்ளார் என்பதும் அடங்கும் என்றும் அவர் கூறினார்.