இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் (Mahinda Rajapaksa) இளைய மகன் ரோஹித ராஜபக்ஷவின் (Rohitha Rajapaksa) கடன் அட்டையில் இருந்து சுமார் 400 டொலர்கள் திருடப்பட்டுள்ளது.
இது குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக நாரஹேன்பிட்டி பொலிஸார் கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் இன்றைய தினம் (09-03-2023) அறிவித்துள்ளனர்.
முறைப்பாட்டாளரின் கடன் அட்டையில் இருந்து 4 தடவைகளில் ஒன்லைன் பரிமாற்றம் மூலம் 387 டொலர்கள் அதாவது 150,000 இலங்கை நாணயம் திருடப்பட்டுள்ளதாக நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி பிரதம பொலிஸ் பரிசோதகர் அகில ரணசிங்க நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்தார்.
இலக்கம் 117, விஜேராம மாவத்தை, கொழும்பு 07 இல் வசிக்கும் ரோஹித ராஜபக்ஷ நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இவர் கடந்த மூன்றாம் திகதி (03-03-2023) கோட்டை, 184 துவா வீதியில் உள்ள தனது வீட்டை விட்டு மாத்தறை வீட்டிற்குச் சென்றதாகவும், இதன் போது சம்பத் வங்கியின் கடன் அட்டை கீ விழுந்துள்ளதாகவும் நாரஹேன்பிட்டி பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.
இது இலங்கை குற்றவியல் சட்டத்தின் 386வது பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும் என நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்த பொலிஸார், சம்பத் வங்கியின் தலைமையக முகாமையாளருக்கு உரிய வங்கிக் கணக்கு பதிவேடுகளை வரவழைக்குமாறு உத்தரவிடுமாறும் கோரியுள்ளனர்.