கடுமையான பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் மக்களும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் (Ranil Wickremesinghe) கூத்துக்களை பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச (Wimal WeeraWansa) தெரிவித்துள்ளார்.
கொழும்பு – டார்லி வீதியில் உள்ள சுதந்திர மக்கள் முன்னணியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
நாட்டு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்குப் பதிலாக, ஜனாதிபதி ரணில் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்து, காற்சட்டை பாக்கெட்டில் கையை வைத்துக்கொண்டு ‘தேர்தலும் இல்லை – தேர்தலுக்கு பணமுமில்லை என்று வேடிக்கையான காட்சிகளைக் காட்டுவதாக விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.
நம்பிக்கை இல்லாது இருக்கும் மக்கள் அந்த நகைச்சுவைக் காட்சிகளைப் பார்க்கத் தயாராக இல்லை. உக்ரைன் ஜனாதிபதி ஒரு கோமாளி என்பதை நாம் அறிவோம். அவர் ஒரு நகைச்சுவை நடிகர். ரணில் நடிகராக இல்லாவிட்டாலும் இன்று நாடாளுமன்றம் வந்து கோமாளி வேடத்தில் நடித்தார்.
ஒரு நகைச்சுவைக் காட்சியை நிகழ்த்திவிட்டு, தனக்குப் பின்னால் இருந்த பார்வையாளர்களின் சிரித்த எதிர்வினைகளைப் பார்த்து ரணில் உற்சாகமடைந்து மற்றொரு நகைச்சுவைக் காட்சியை நிகழ்த்தினார்.
நாடாளுமன்றம் என்பது மக்களின் வரிப்பணத்தால் பராமரிக்கப்படும் இடம். எனவே, மக்கள் மீது உங்களுக்கு உணர்வுபூர்வமான எண்ணம் இருந்தால் நாடாளுமன்றத்திற்கு வந்து நகைச்சுவை காட்சிகளை நடத்துவதை நிறுத்துமாறு ஜனாதிபதியிடம் கேட்டுக் கொள்வதாக விமல் வீரவன்ச மேலும் தெரிவித்துள்ளார்.