சிவனொளிபாதமலை யாத்திரைக்கு சென்றவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்த நிலையில் அந்த விபத்தில் தனது காதலியும் உயிரிழந்தை அறியாத காதலன் அவரை தேடும் சோக சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
கடந்த 19 ஆம் திகதி நோட்டன் பிரிட்ஜ், டெப்ளோ பகுதியில் பள்ளத்தில் வீழ்ந்து பேருந்து விபத்திற்குள்ளானதில் மூவர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் விபத்தில் காயமடைந்த பலர் மூன்று வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞன் ஒருவர் சுயநினைவிற்கு திரும்பியவுடன் தனது காதலியை தேடியுள்ளார்.
மருத்துவமனையில் தாதி ஒருவரை அழைத்த இளைஞர் “மிஸ், நாங்கள் மிகவும் சோர்வடைந்த நிலையில் பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பி வரும் வழியிலேயே இந்த விபத்து இடம்பெற்றது. எனது காதலி என்னுடன் வந்தார். அவர் சோர்வாக உள்ளதென கூறி என் மடியில் தலை வைத்து வந்தார். விபத்துக்குப் பிறகு நான் சுயநினைவை இழந்தேன். என்னை இங்கு அழைத்து வந்தது மட்டும் ஞாபகம் இருக்கிறது. காதலி எந்த மருத்துவமனையில் உள்ளார்? அவருக்கு என்ன நடந்தது என தேடி பார்த்து கூறுங்கள்” என இளைஞன் தாதியிடம் கேட்டுள்ளார்.
அவர் வழங்கிய தகவலுக்கமைய தாதி காதலியை தேடி பார்த்த போது அது உயிரிழந்த இரண்டு யுவதிகளில் ஒருவர் என தெரியவந்துள்ளது.
இந்நிலையில் அதைக் கேட்டதும் எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது. இப்படி இருக்கையில் காதலித்தவர் உயிருடன் இல்லை என எப்படி அவரிடம் சொல்ல முடியும். அதனால சொல்லக் கூடாதுன்னு முடிவு செய்தேன் என அந்த தாதி வேதனையுடன் இந்த சம்பவத்தை தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.