கடந்த 2015ம் ஆண்டு, TransAsia ஏர்வேஸ் 235 விமான விபத்தில், இரண்டு பாதியாக பிரிக்கப்பட்ட கார் டாக்ஸி தொடர்பான காட்சிகள் தற்போது இணையத்தில் மீண்டும் பரவி வருகிறது.
விமான விபத்து
கடந்த 2015ம் ஆண்டு பிப்ரவரி 4ம் திகதி தைவான் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சீனாவின் முக்கிய விமான நிலையம் நோக்கி பறந்த TransAsia ஏர்வேஸ் விமானம் 235-யில் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது.
இதனால் கட்டுப்பாட்டை இழந்த விமானம் பாலத்தின் மீது மோதி அங்கு இருந்த நீர் நிலையில் விழுந்து விபத்துக்குள்ளானது.
விமானத்தில் 58 பேர் வரை பயணம் செய்த நிலையில் 15 பேர் மட்டுமே உயிர் தப்பினர், மற்ற 43 பேரும் பரிதாபமாக இந்த விமான விபத்தில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டனர்.
இது தொடர்பாக அப்போது வான் விபத்து ஆய்வாளர் வெளியிட்ட அறிக்கையில், விமானத்தின் இயந்திர கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
பீதியில் இயந்திரத்தை அணைத்த விமானி
ஆனால் பிறகு கிடைத்த ஆடியோ ஆதாரங்கள் மற்றும் விசாரணைக்கு பிறகு, சக விமானியின் பீதியில் ஏற்பட்ட விபத்து இது என்று உறுதிப்படுத்தப்பட்டது.
TransAsia ஏர்வேஸ் விமானம் 235 தைவான் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திற்கு பிறகு, விமானத்தின் வலது புறம் உள்ள என்ஜினில் இருந்து புகை வெளியேறி அதன் ஆற்றலை இழந்துள்ளது.
இதையடுத்து விமானத்தின் கேப்டன் லியாவோ சியென்-சுங் மற்றும் அவரது துணை விமானி லியு டிசே-சுங் இடையே நடந்த உரையாடல் தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டு, விமானத்தின் சக விமானி இரண்டாவது என்ஜினையும் பீதியில் தவறுதலாக அணைத்துள்ளார்.
விமானத்தின் இரண்டு என்ஜின்களும் அணைக்கப்பட்டதால், தாழ்வான உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானம் பாலத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
டாக்சியை இரண்டாக பிளந்த விமானம்
இந்த விமான விபத்தின் போது, பாலத்தின் சென்று கொண்டு இருந்த டாக்சி மீது விமானத்தின் இறக்கைகள் மோதி காரை கிட்டத்தட்ட இரண்டு பாதிகளாக பிரித்து சென்ற காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.இதில் அதிர்ஷ்டவசமாக டாக்சியில் இருந்த இருவர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர்.
இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகளில் மோதாமல் விலகி வந்த விமானம், இறுதியில் டாக்சி காரை இரண்டு துண்டுகளாக பிளந்து சென்ற காட்சிகள் சினிமா கிராபிக்ஸ் காட்சிகள் போன்று இருப்பது குறிப்பிடத்தக்கது.