பிரான்சில் பீட்சா கடை நடத்திய இத்தாலியின் மாபியா குழு தலைவன் கைது!

0
344

பிரான்சில் பீட்சா கடை ஒன்றில் தலைமை சமையல்காரராக இத்தாலியின் மிகப்பெரிய மாபியா குழு தலைவன் வேலை செய்து வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இத்தாலியின் மிகப்பெரிய மாபியா குழுவான டிரன்ங்ஹிடா என்ற குழுவின் தலைவர்களில் ஒருவரான எதர்டொ கிரிகொ (Edgardo Greco) கொலை, போதைப்பொருள், ஆட்கடத்தல், சூதாட்டம் உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்.

இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில் 2006-ம் ஆண்டு கிரிகொ மீது இத்தாலி நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்தது. கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க கிரிகொ தலைமறைவானார்.

இண்டர்போல் உதவியுடன் கிரிகொவை இத்தாலி பொலிசார், உளவுத்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் 16 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கிரிகொ பிரான்சில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இண்டர்போல் உதவியுடன் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2006ல் கொலை வழக்கு தொடர்பில் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க தலைமறைவான கிரிகொ பிரான்ஸ் நாட்டில் நுழைந்துள்ளார்.

அங்கு தனது பெயரை பொலோ டிமிட்ரியோ (Paolo Dimitrio) என்று மாற்றியுள்ளார். பின்னர் பிரான்சின் பல்வேறு நகரங்களில் உள்ள ஹொட்டல்களில் பீட்சா செய்யும் சமையல்காரராக வேலை செய்துள்ளார்.

இதனை தொடர்ந்து பிரான்சின் செயிண்ட்-இடினி நகரில் மற்றொரு நபருடன் சேர்ந்து சொந்தமாக பீட்சா கடை தொடங்கியுள்ளார். தனது உணவகத்தை பிரபலபடுத்த உள்ளூர் டிவிக்கு பேட்டி அளித்துள்ளார். மேலும், செய்தித்தாள்களில் விளம்பரமும் கொடுத்துள்ளார்.

இது தொடர்பான தகவல்கள் இண்டர்போல் வசம் சென்றுள்ளதனை தொடர்ந்து பிரான்ஸ், இத்தாலி பொலிசாருடன் இணைந்து இண்டர்போல் நடத்திய விசாரணையில் 16 ஆண்டுகளுக்கு முன் இத்தாலியில் தலைமறைவான கிரிகொ தான் சொந்தமாக பீட்சா கடை நடத்தி வருவது வெளிச்சத்துக்கு வந்தது.