வீதியில் ஆசிரியை பாலியல் துஷ்பிரயோகம்-முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் கைது

0
412

வர்த்தக நிலையத்திற்கு சென்றுக்கொண்டிருந்த முன்னாள் பாடசாலை ஆசிரியையை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஐக்கிய தேசியக்கட்சியின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆசிரியை மொரகஹாஹேன, மில்லேவ தம்மானந்த பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றுக்கு சென்றுக்கொண்டிருந்த போது கெப் வண்டியில் சென்ற முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் வாகனத்தில் இருந்து இறங்கி ஆசிரியை இடைமறித்து அவரை கட்டியணைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அப்போது ஆசிரியை சந்தேக நபரிடம் இருந்து தப்பித்து அருகில் உள்ள வீடொன்றுக்குள் சென்றுள்ளார். ஆசிரியை பின் தொடர்ந்து சென்ற சந்தேக நபர், வீட்டில் இருந்த பெண்ணொருவரிடம் ஆசிரியை எங்கே என்று கேட்டுள்ளார்.

ஆசிரியை வீட்டுக்கு பின்னால் உள்ள மதில் மீது ஏறி குதித்து தப்பிச் சென்றதாக அந்த பெண் கூறியுள்ளார்.

இதன் பின்னர் சம்பந்தப்பட்ட ஆசிரியை பொலிஸ் அவசர அழைப்பு இலக்கமான 119 இலக்கத்துடன் தொடர்புக்கொண்டு முறைப்பாடு செய்ததை அடுத்து மொரகஹாஹேன பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

சந்தேக நபரின் பாலியல் துஷ்பிரயோகம் காரணமாக நக கீறல் காயங்கள் உள்ளாகியுள்ள ஆசிரியை ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் ஹொரணை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.