வெளிநாட்டில் இருந்து வந்த மாமியார்! சில நாட்களில் உயிரிழந்த மருமகள் மற்றும் இரட்டை குழந்தைகள்..நடந்தது என்ன?

0
444

கணவர் வெளிநாட்டில் வேலை செய்யும் நிலையில் மனைவி தனது இரட்டை குழந்தைகளுடன் வீட்டில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரட்டை குழந்தைகள்

தமிழகத்தின் கடலூரை சேர்ந்தவர் ஜெயா (25). இவருக்கும் பெரம்பலூரை சேர்ந்த கண்ணன் – தமிழ்செல்வி மகன் விஜயகுமார் என்பவருக்கும் கடந்த 2020ல் திருமணம் நடந்த நிலையில் தம்பதிக்கு நிகிதா, நிகிசா என்ற இரட்டை குழந்தைகள் இருந்தனர்.

என்ஜினீயரான விஜயகுமார் துபாயில் வேலை பார்த்து வருகிறார். இதனால் ஜெயா தனது குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் விஜயகுமார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்துவிட்டு மீண்டும் துபாய்க்கு சென்றதாகவும், விஜயகுமாரின் தாய் தமிழ்ச்செல்வி கடந்த சில மாதங்களாக துபாயில் இருந்துவிட்டு பொங்கல் பண்டிகைக்கு முன்பாக சொந்த ஊர் வந்ததாகவும் கூறப்படுகிறது.

மூன்று சடலங்கள்

இந்த நிலையில் கடந்த 23ம் திகதி தமிழ்ச்செல்வி அழைத்ததன்பேரில் ஜெயா குழந்தைகளுடன் கணவர் வீட்டிற்கு வந்தார். இந்த சூழலில் நேற்று காலை ஜெயா, தனது மாமியார் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையிலும் அவரின் இரண்டு குழந்தைகள் வாயில் நுரை தள்ளிய நிலையிலும் இறந்து கிடந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் சடலங்களை கைப்பற்றிய நிலையில் 2 குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்துவிட்டு, ஜெயா தூக்குப்போட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்று கருதுகின்றனர்.

விசாரணை

தங்களது மகள், பேத்திகள் சாவில் மர்மம் உள்ளதாகவும், விஜயகுமாரின் தாய் தமிழ்ச்செல்வி மற்றும் அண்ணன் வினோத்குமாரின் மனைவி பிரியா ஆகியோர் ஜெயாவை கொடுமைப்படுத்தி வந்ததாகவும், மேலும் கணவரின் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு ஜெயாவை கொடுமைப்படுத்தி வந்ததாகவும் ஜெயாவின் பெற்றோர் தரப்பில் புகார் கூறப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக சந்தேக மரணம் என்று மங்களமேடு பொலிசார் வழக்குப்பதிவு செய்து மூவரும் கொலை செய்யப்பட்டனரா அல்லது ஜெயா தனது பிள்ளைகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்தாரா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.