தலைவர் இருக்கிறார்.. அவருக்கு மருத்துவம் செய்ய காசு வேணும்!! அடுத்த கூத்து

0
326

‘தலைவர் உயிரோடு இருக்கிறார்… துனைவியார் மற்றும் மகளும் இருக்கிறார்கள்… நெத்தியில பொட்டுவைத்தவரும் இருக்கிறார்..’

12.11.2022 அன்று சுவிட்சலாந்தில் இரகசியமாக நடைந்த கூட்டமொன்றில் வைத்து சில வர்த்தகர்களிடம் இந்த கதை அவிழ்க்கப்பட்டது.

கதையை அவிழ்த்துவிட்டவர்: சுவிஸ்கிளையின் முன்நாள் நிதிப்பொறுப்பாளர்.

‘தலைவருக்கு சுகமில்லை. அவருக்கு மருத்துவம் செய்யக் காசு வேணும். அவரது குடும்பத்தை பாதுகாப்பான ஒரு இடத்துக்கு நகர்த்தவேணும். உதவுங்கள்..’ இதுதான் கதையின் கிளைமாக்ஸ்.

கதையைக் கேட்டு விறைத்துநின்றவர்களுக்கு..’ நீங்கள் விரும்பினால் அவர்களுடன் பேசலாம். கூட்டிப்போயும் காட்டுறம். அதுக்குப் பிறகாவது நம்புங்கள்..’ என்று நம்பிக்கையூட்டப்பட்டது.

தொடர்ந்தும் யோசித்துக்கொண்டிருந்த ஒருசிலர் ஒரு விட்டுக்கு அழைத்துச்செல்லப்பட்டார்கள். அங்கு முகமூடியணிந்த இரண்டு பெண்கள் காண்பிக்கப்பட்டார்கள்.

போன வர்த்தகர்கள் யாருமே குறிப்பிடப்பட்ட அந்த இரண்டு நபர்களையும் முன்னப்பின்னப் பார்த்ததும் இல்லை. தொலைபேசியில் கூட பேசியதும் இல்லை.

ஆர்வக்கோளாரினால் பெருமளவு பணம் வழங்கியிருக்கின்றார்கள்.

பிரித்தானியா, பிரான்ஸ் போன்ற நாடுகளிலுள்ள தமிழ் வர்த்தகர்களுக்கும் இந்த கதை அவிழ்க்கப்பட்டுவருகின்றது.

வீட்டை விற்று, தமது வியாபாராத்தை விற்று நிதி வழங்கிய சம்பவங்கள் எல்லாம் நடந்திருக்கு.

இந்தக் கதை சொஞ்சம் கொஞ்சமாக வெளியே பரவி, தலைவரின் மெய்பாதுகாவலர்களாகக் கடமையாற்றிய போராளிகள் சிலரது காதுகளுக்குச் சென்று, அவர்கள் அதனை உறுதிப்படுத்த விரைந்த போது அவர்களுக்குப் பார்வையிட அனுமதி மறுக்கப்பட்டது.

அதாவது தலைவரை நன்கு தெரிந்தவர்கள் யாருக்குமே இந்தக் கதை அவிழ்த்துவிடப்படவில்லை. கொஞ்சம் தள்ளி நிற்கிற ஆர்வக்கோளாறுகளுக்கு மாத்திரம்தான் கதை பரிமாறப்படுகின்றது.

புலம்பெயர் மண்ணில் இன்றைக்கு பெரிய பேசுபொருள் இதுதான்.

பணப்பறிப்பு. புலம்பெயர் தமிழர்களின் நிதியை முடக்குவது போன்றனவற்றைக் கடந்து, இந்த நாடகத்திற்கு வேறு சில முக்கிய காரணங்களும் இருப்பதாக எச்சரிக்கின்றார்கள் சில முன்நாள் போராளிகள். 

  • ஒரு உயரிய தியாகத்தை கொச்சைப்படுத்துவது.
  • ஒரு வீர வரலாற்றை மாற்றி எழுதுவது.
  • தமிழ் மக்கள் நினைவுகூறக்கூடிய திகதிகளை குழப்புவது.
  • தமிழ் மக்களை தொடர்ந்து குழப்பநிலையிலேயே வைத்திருப்பது.
  • கட்டமைப்புக்களிடையே பிளவுகளை ஏற்படுத்துவது

தமிழ் இனத்தைக் குறிவைத்து தமிழ் மக்களின் எதிரி மேற்கொள்ளுகின்ற திட்டமிட்ட ஒரு புலனாய்வுச் செயற்பாடு என்று இந்தச் செயற்பாடு பற்றி உறுதியாகக் கூறுகின்றார்கள் சில முன்நாள் போராளிகள்.